Friday, September 16, 2011

காலை உணவுக்கு வித்திட்ட தொடக்கப்பள்ளி!


பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு காலை உணவு ஆரம்பித்து பல்வேறு புதிய நடைமுறைகளை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி, மற்றப் பள்ளிகளுக்கு முன்மாதிரிப் பள்ளிகளாக மாற்றி சாதனைப் படைத்துள்ளார் இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுபெற்றுள்ள திருச்சி தஞ்சம்மாள் மெமோரியல் தொடக்கப்பள்ளி ஆசிரியை விசாலாட்சி.
மற்றப் பள்ளிகளுக்கு முன்னுதாரணமாய் உங்கள் பள்ளியை மாற்றியது எப்படி என்று விசாலாட்சியிடம் கேட்டோம்.
இந்தப் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்து 35 வருஷம் ஆகுது. 22 வருஷம் உதவி ஆசிரியரியராக பணியாற்றினேன். 1999ஆம் வருஷத்திலிருந்து இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். எங்கள் பள்ளியில் படிக்கும் அனைத்துக் குழந்தைகளும் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள்தான். எந்தக் குழந்தைக்கும் மூன்று நேர உணவு என்பது கனவுதான்.
மதியம் எப்படியும் சத்துணவு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், காலையில் பட்டினியுடன் ஒட்டிய வயிற்றுடன் வரும் அவர்கள், மதியத்திற்குள்ளாகவே சோர்வாகிவிடுவார்கள். தொடர்ந்து இதை கவனித்து வந்தேன். இதற்கு ஏதாவது மாற்று வழி செய்யவேண்டும் என்று யோசித்து, காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்த யோசித்தேன். ஊரில் ஓரளவு உதவி செய்பவர்களின் பட்டியல் எடுத்து அவர்களிடம் தயங்காமல் கையேந்தினோம். உதவி கிடைத்தது. சிலர் அரிசியாக கொடுத்தார்கள். சிலர் பருப்பு கொடுத்தார்கள். சிலர் தயிர், பழம், காய்கனி கொடுத்து உதவினார்கள். அவர்களின் உதவிப்படி 2007ஆம் ஆண்டு எங்கள் பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கினோம். பசிப்பிணியை நீக்கினால், படிப்பறிவு தானாக ஊற்றெடுக்கும் என்ற பொன்மொழியின் அடிப்படையில் நாங்கள் தொடங்கிய இந்த திட்டத்தால், எங்கள் பள்ளியில் பள்ளி இடைநிற்றல் இல்லாமல் போனது. மாணவர்கள் ஆர்வமாய் பள்ளிக்கு வருகிறார்கள். இன்று எங்கள் பள்ளியைப் பின்பற்றி திருச்சியில் 40 பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மற்றவர்களை தொடர்புகொள்ள தற்போது பல்வேறு வசதிகள் பெருகிப்போய், லெட்டர் எழுதும் வழக்கம் குறைந்து வருகிறது. ஆனால், கடிதம் எழுதும் நல்ல விஷயத்தை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக வகுப்பு நடத்தும் ஆசிரியர்களைப் பற்றியும், இன்று வகுப்பில் என்ன நடந்தது? பாடம் எப்படி புரிந்தது என்பதைப் பற்றி ஆசிரியர்களுக்கு கடிதம் எழுத கற்றுக்கொடுத்தோம். அந்த முயற்சி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் நல்ல புரிதலை ஏற்படுத்தி தந்தது. எந்த மாணவர்களுக்கு பாடங்கள் சரியாகப் புரியவில்லை என்பதை எங்களால் அடையாளம் காண முடிந்தது. அதேபோல, ஆங்கிலத்திற்கு இணையான தமிழ் சொல்லை சுவற்றில் படம் வரைந்து வைத்திருப்போம். சுவர் அகராதி என்னும் இந்த செயல்முறை மூலம் மாணவர்கள் மத்தியில் ஆங்கிலத்தை எளிமையாக என்னால் எடுத்துச் செல்ல முடிந்தது. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக எந்த தொடக்கப்பள்ளியை திருச்சியில் முன்னுதாரணப் பள்ளியாக உயர்த்திவிட்டோம். ஆனால், தமிழகத்தின் முன்மாதிரி தொடக்கப்பள்ளியாக மாற்றுவதே தற்போது எனக்கு இருக்கும் லட்சியம் என்றார் இந்த தேசிய நல்லாசிரியை.

அன்று குழந்தைத் தொழிலாளி: இன்று நல்லாசிரியர்!


புதுக்கோட்டை நெடுவாசல் வடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் குடியரசுத் தலைவரிடமிருந்து தேசிய நல்லாசிரியர் விருது பெறுகிறார். சிறிய கிராமத்தில் வறுமைச் சூழ்நிலையில் பளளிப் படிப்பை முடித்த அவர், கிராமப்புறத்தில் உள்ள ஊராட்சி பள்ளியை பிரமாதமாக மாற்றிக் காட்டியுள்ளார்.
இந்த சாதனையைத் தொட எவ்வளவு தூரம் உழைத்தீர்கள் என்று ஆசிரியர் கருப்பையனிடம் கேட்டபோது, விருதுக்காக உழைக்கவில்லை. நான் பட்ட கஷ்டம், என் மாணவர்கள் பட்டுவிடக்கூடாது என்பதற்கு நான் கொடுத்த உழைப்புக்கான கூலிதான் இந்த விருது. என்னுடைய அம்மா, அப்பா இருவரும் கூலித்தொழிலாளர்கள்தான். அப்பாவுக்கு குடிப்பழக்கம் உண்டு. அதனால், அப்பா சம்பாதிப்பது வீட்டுக்கு வராது. அம்மாவின் கூலிதான் எங்களுக்கு எல்லாமுமே. இருந்தாலும் தேவை இருந்ததால், ஸ்கூல் விட்டுவந்து மாலையில் ஏதாவது கூலி வேலைக்கு போய்விட்டு இரவில்தான் வீட்டுக்கு வருவேன்.
நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது ஓர் ஆங்கில டிக்ஷனரி வாங்க வேண்டும் என்ற ஆசை. அதற்காக மூன்று நாட்கள் வேலைப் பார்த்து கிடைத்த கூலியை மணியார்டர் மூலம் ஓர் பதிப்பகத்திற்கு அனுப்பிவைத்தேன். அவர்களும் புத்தகத்தை அனுப்பி வைத்தார்கள். ஆனால், புத்தகம் அனுப்புவதற்கு ஸ்டாம்ப் ஒட்டுவதற்கான பணத்தை அனுப்ப வேண்டும் என்பது எனக்கு அப்போது தெரியாது. புத்தகத்தை எடுத்துக்கொண்டு தபால்காரர் வீட்டிற்கு வந்தார். ஸ்டாம்பிற்கான ஃபைன் பணத்தைக் கட்டினால், புத்தகத்தை தருவேன் என்றார். என்னிடம் காசு இல்லை என்றதும், மூன்று நாட்கள் போஸ்ட் ஆபீசில் புத்தகம் இருக்கும். பணத்தைக் கட்டிவிட்டு புத்தகத்தை வாங்கிக்கோ என்று சென்றுவிட்டார். பணம் கட்டி புத்தகம் வாங்குவதற்காக அன்று சவுக்குக் கன்று விற்பனை செய்து, அதில் கிடைத்த கூலியில் புத்தகத்தை வாங்கி வந்தேன். பத்தாம் வகுப்பில் 416 மதிப்பெண்கள் பெற்றேன். பிளஸ் டூ முடிச்சு என்ஜினீயரிங் படிக்கவேண்டும் என்பதுதான் கனவு. ஆனா, பள்ளிக் கட்டணம் கட்டவே வழி தெரியாததால், என் உறவினர் அளித்த அறிவுரையின் பேரில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படித்தேன். ஆசிரியர் பள்ளியில் படிக்கும்போது, கல்வி உபகரணங்கள் வாங்குவற்குவதற்கும் பகுதிநேரம் வெவ்வேறு இடங்களில் வேலைப் பார்த்தேன்.
1988ஆம் ஆண்டு ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். எந்த வகையிலும் முன்னேற்றமே அடையாத ஒரு பள்ளியை, அமைதி, பசுமை, அடிப்படை வசதிகள் அத்தனையும் செய்து அதிநவீன கல்வி தொழில்நுட்ப கருவிகளுடன் கல்வித்துறையின் வழிகாட்டல்களை முழுமையாகப் பின்பற்றி தரமான கல்வியுடன் கூடிய பள்ளியை உருவாக்குவதுதான் என் கனவு.
அதற்கான வாய்ப்பு 2005ஆம் ஆண்டில் கிடைத்தது. ஆனால், நான் எண்ணியதற்கு மாறாக மிக வசதிபடைத்த பள்ளியில் தலைமை ஆசிரியர் பதவி கிடைத்தது. நான் கண்ட கனவு கலைந்துவிடக்கூடாது என்பதற்காக, கல்வி அதிகாரியைச் சந்தித்து, இந்த மாறுதலை நிறுத்தி, கல்வியில் எந்த முன்னேற்றமும் அடையாத, ஆசிரியர்களே வெறுத்து ஒதுக்கும் பள்ளிக்கு என்னை மாற்றுதல் செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்தேன். அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கல்வி அதிகாரி, இந்தப் பள்ளிக்கு மாறுதல் செய்தார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றேன். இந்த கிராமத்தில் பள்ளிப்படிக்கும் வயதில், பள்ளிக்கு வராத குழந்தைகள் அதிகம். பெற்றோருக்கு எழுத்தறிவு கிடையாது. எல்லாரும் கூலித் தொழிலாளர்கள். பள்ளிக்கு ஒரு மாணவனை கொண்டு வருவது என்பதே எனக்கு மிகப்பெரிய சவால்.
அனைவருக்கும் கல்வி என்பதைவிட, அனைவருக்கும் தரமான கல்வி என்பதுதான் என் குறிக்கோள். அந்த அடிப்படையில் செயல்பட ஆரம்பித்தேன். கிராமக் குழுக் கூட்டத்தில் கல்வியின் அவசியம் குறித்து பேசி பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப கிராம மக்களை வலியுறுத்தினேன். என் ஒருவனால் மட்டும் இது சாத்தியப்படாது என்பதை புரிந்துகொண்டு பெற்றோர் ஆசிரியர் கழகம், கிராமக்கல்விக்குழு, இளைஞர் மன்றத்தினர், சுயஉதவிக்குழுக்கள், முன்னாள் மாணவர்கள், கல்விக் கொடையாளர்கள் இப்படி ஒவ்வொருவரையும் அணுகி மாணவர்களை பள்ளிக்குள் கொண்டு வருவதில் ஆரம்பித்து பள்ளிக்கான வளர்ச்சிக்கும் அவர்களை நான் பயன்படுத்திக்கொண்டேன். மாணவர்களுக்கு படிக்கும் சூழலையும், அவர்களின் மனநிலைக்கு தகுந்தவாறு கற்பித்தல் முறையை மாற்றினேன். இதனால், மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர ஆரம்பித்தார்கள்.
எங்கள் கிராமத்தை பொறுத்தவரை கழிப்பிட வசதி கிடையாது. எல்லாவற்றுக்கும் பொது இடங்கள்தான் கழிப்பறை. எங்கள் மாணவர்கள் பிரசாரத்தின் மூலம் அதனை நிறுத்தினோம். என் சேவையைப் பாராட்டி ஒரு தொண்டு நிறுவனம் நமது கிராமம் விருது அளித்தது. அந்த விருதுக்கான தொகையை வைத்து கிராமத்திற்கு பொதுக் கழிப்பிடம் கட்டினோம்.
பள்ளிக்கு கம்ப்யூட்டர் வாங்குவது எனது கனவு. நண்பர் ஒருவர் தான் பயன்படுத்திவரும் கம்ப்யூட்டர் ஒன்றை முதலில் எங்களுக்குத் தந்தார். அந்த கம்ப்யூட்டரை மாணவர்கள் பயன்படுத்துவதை ஒருநாள் நேரில் பார்த்துவிட்டுச் சென்ற நண்பர், புதிதாக கம்ப்யூட்டர் வாங்க 50 ஆயிரம் ரூபாய்க்கு காசோலை அளித்தார். அந்த காசோலையை மாவட்ட ஆட்சியரின் பெயரில் டி.டி.யாக எடுத்துத் தரச் சொன்னேன். அவரும் ஆட்சியர் பெயரில் எடுத்துக்கொடுத்தார். நமக்கு நாமே திட்டம் மூலம் அந்தப் பணத்தை மூன்று மடங்காக ஆட்சியர் மூலம் பெற்று, அந்தப் பணத்திற்கு முழுவதும் கம்ப்யூட்டர் வாங்கி மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன். இப்போது எல்லா வகுப்பு மாணவர்களுக்கும் கம்ப்யூட்டர் குறித்த அடிப்படை அறிவு வளர்ந்திருக்கிறது.
இதுதவிர சென்னை ஐ.ஐ.டி. உதவியுடன் சில கல்வி உபகரணங்களைப் பெற்று ஆசிரியர்கள் வகுப்பு நடத்துவதை முழுவதும் ரெக்கார்டு செய்து, பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு திருப்பி போட்டுக் காட்டுவதன் மூலம் மாணவர்கள் விரும்பி படிக்க ஆரம்பித்தார்கள். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ஜெராக்ஸ் மிஷின், பிரிண்ட்டர், ஸ்கேனர், எல்லாம் வாங்கி வைத்து, மாணவர்களுக்கு தினமும் நடத்தும் பாடத்தை வாரத்திற்கு ஒரு தடவை முழுஆண்டு தேர்வு போல நடத்தி, அந்த மதிப்பெண்களை உடனடியாக கொடுத்து, அவர்களை ஊக்குவித்து வருகிறோம். இப்போது எங்கள் பள்ளியில் படிக்கத் தெரியாத மாணவர் என்று ஒருவர் கிடையாது என்று பெருமிதப்படுகிறார் 39 வயதில் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற கருப்பையன்.

புதிய மன்னர்கள்!


மிகப்பெரிய ஐ.டி. நிறுவனத்தில் பொறியாளராக கைநிறைய ஊதியம், கனவுப் படிப்பான மருத்துவம் இப்படி எல்லாமும் உதறித்தள்ளிவிட்டு சமுதாயப் பணி செய்வதற்காக டி.என்.பி.எஸ்.சி. தேர்வெழுதி டெபுடி-கலெக்டராகவும், உதவி காவல் ஆய்வாளராகவும் பொறுப்பேற்று இருக்கிறார்கள் ஏழு இளைஞர்கள்
கஷ்டப்பட்டு எப்படியாவது என்ஜினீயரிங் முடிச்சுட்டு ஐ.டி. கம்பெனியில கை நிறைய சம்பாதிக்கணும். அதில் இருந்துக்கிட்டே அப்படியே ஃபாரீன் போயிட்டு ஹைடெக் வாழ்க்கை வாழணும்னு நினைக்கிற இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய ஊதியத்தை உதறித் தள்ளிவிட்டு, தங்கள் படிப்பை மக்களின் சேவைக்கு பயன்படுத்தவேண்டும் என்ற ஆசை எப்படி வந்தது?.
பழனி பக்கத்துல உள்ள பெத்தநாயக்கன்பட்டி கிராமம்தான் எனக்கு சொந்த ஊர். எங்கள் குடும்பம் விவசாயம் சார்ந்தது. அப்பா நாலாவது வரை படிச்சிருக்கிறார். எங்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரி நான்தான். எங்க குடும்பத்துல யாருமே படிக்காததால, அப்பாவுக்கு என்னை இங்கிலீஸ் மீடியத்துலதான் படிக்க வைக்கணும்னு ஆசை. ரொம்ப கஷ்டப்பட்டு படிக்க வச்சார். பிளஸ் டூ வுல 1052 மதிப்பெண்கள் எடுத்திருந்தேன். அப்போ பொறியியல், மருத்துவம் படிக்கறதுக்கு நுழைவுத் தேர்வு உண்டு. அந்தத் தேர்வில் பழனி கல்வி மாவட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்து தேர்ச்சிப் பெற்றேன். நுழைவுத்÷ தர்வு மற்றும் நான் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், கோயமுத்தூரில் பி.எஸ்.ஜே. அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவு கிடைத்தது. சொல்லப்போனா எங்க ஊர்ல என்ஜினீயரிங் சேர்ந்து படிச்ச முதல் மாணவன் நான்தான்.
படிக்கும்போது அரசு சார்பில் பல்வேறு உதவித்தொகைகளைப் பெற்றிருக்கிறேன். 2003ஆம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்தேன். 2007ஆம் ஆண்டு பொறியியல் படிப்பு முடிக்கும் முன்பாகவே தனியார் ஐ.டி. துறையில் புராஜக்ட் என்ஜினீயர் பதவியில் வேலைக்கு அமர்ந்தேன். எடுத்த எடுப்பிலேயே 35 ஆயிரம் சம்பளம். பட்ட கஷ்டத்துக்கு கைநிறைய சம்பளம் என்ற மனநிலைக்குப் பதிலாக, அரசு கொடுத்த இலவசப் படிப்பில் படித்துவிட்டு, அதில் பெற்ற கல்வியை வெளிநாட்டு தனியார் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்த மனம் இடம்கொடுக்கவில்லை. என்னுடைய படிப்பு தமிழக வளர்ச்சிக்கு பயன்பட வேண்டும் என்ற எண்ணமும், சீறுடைப் பணியில் சேர வேண்டும் என்ற ஆசையும் எழுந்தது. இதே ஆசையில் ஆறு நண்பர்கள் என்னுடன் பயிற்சி மையத்தில் சேர்ந்தார்கள் என்றார், தற்போது டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வில் தேர்ச்சிப் பெற்று டெபுடி கலக்டர் பதவியை மறுத்து, டி.எஸ்.பி. பதவியை தேர்வு செய்த பொன்.கார்த்திக்.
முதல் முதல்ல நாங்க எல்லாரும் ஒரு தனியார் பயிற்சி மையத்துலதான் சந்திச்சோம். டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1ல் பாஸ் பண்ணியாச்சுன்னா கை நிறைய சம்பளம் கிடைக்கும்னு, நாங்க இந்தத் தேர்வை தேர்வு செய்யல. நான் சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. துறையில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அமெரிக்கா செல்லக்கூடிய வாய்ப்பு வந்த சமயம்தான், அந்தப் பணியை உதறிவிட்டு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத முன்வந்தேன். என்னுடைய படிப்பு இந்த சமுதாயத்திற்கு பயன்பட வேண்டும். அரசு அலுவலகங்கள் என்றாலே லஞ்சம் கொடுத்தால்தான் வேலை கிடைக்கும் என்ற நிலை இருக்கிறது. பணப் பரிவர்த்தனை அனைத்தையும் எலக்ட்ரானிக் முறையில் கொண்டு வந்தால், லஞ்சம் என்ற ஒன்றை அறவே ஒழிக்கலாம். அதற்கான ஆக்கப்பூர்வமான திட்டத்தை வகுத்துக்கொடுப்பேன். நகரங்களில் மட்டுமே பெரும் கடைகளில் பண பரிவர்த்தனை எலக்ட்ரானிக் கார்டுகள் மூலம் நடைபெறுகிறது. இந்த திட்டத்தை அரசு அலுவலகங்கள் ஆரம்பித்து கிராமங்கள் தோறும் கொண்டு சென்றுவிட்டால், லஞ்சத்தை ஒழிக்கலாம்தானே! என்கிறார் இந்த ஆண்டு குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று துணைப் பதிவாளர் பதவியில் அமரப்போகும் ஜானகி.
நான் மதுரை தியாகராஜா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படிச்சிட்டு இருந்தப்போ, அப்பா கேன்சர்ல இறந்துட்டார். வங்கிக் கடன்லதான் பொறியியல் படிப்பை படிச்சேன். பட்டப் படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறேன். படிச்சு முடிச்சவுடனேயே தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை கிடைச்சது. கடன் வாங்கி படிச்சதுலேயும், வீட்ல பணத் தேவை இருந்ததாலேயும் கண்டிப்பா வேலைக்கு சேர வேண்டிய சூழ்நிலை. ஒன்றரை வருஷம் வேலை பார்த்து இருந்த கடன்களை அடைச்சேன். நண்பர்கள் கொஞ்சம் உதவினாங்க. முதலாளி யாருன்னு தெரியாது. நாள் முழுக்க எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் கூடத்தான் கழிச்சு ஆகணும். என்னுடைய அடையாள அட்டையை கழட்டி வச்சிட்டா, நான் யாருன்னே அந்த நிறுவனத்துக்கு தெரியாது. இந்த மாதிரி சூழலுக்காகத்தான் தங்கப் பதக்கம் பெற்றேனா.. என்ற எண்ணமும், சமுதாயத்துக்கு தங்கப்பதக்கம் பெற்றுத் தந்த என் படிப்பு உதவணும்ங்கறதால, வேலையை தூக்கிப் போட்டுட்டு தனியார் பயிற்சி மையத்துல டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு எழுதி முதல் முறையிலேயே தேர்ச்சிப் பெற்றுவிட்டேன் என்கிறார் தமிழக அளவில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று, சப் கலெக்டராக அமரப்போகும் அருண் சத்யா.
சுத்தமான காய்கனி, பழங்கள் கிடைப்பதில்லை. எல்லாவற்றிலும் பூச்சிக்கொள்ளி மருந்து விஷம்போல் இருக்கிறது. விவசாயத்தில் இயற்கை உரங்களின் அவசியத்தை மக்களிடைய எடுத்துச் சொல்லணும். இயற்கை உரங்கள் பயன்படுத்தி அதிக சாகுபடி பெறுவதற்கான புதிய திட்டங்கள் வகுத்துக்கொடுத்து, விவசாயத்தில் தமிழ்நாடு தன்னிறைவு பெற்ற மாநிலமா இருக்கணும் அதற்கு புதுத் திட்டங்களை வகுத்துக்கொடுப்பேன் என்கிறார் பல் மருத்துவப் படிப்பை படித்து மருத்துவப் பணிக்குச் செல்லாமல், தற்போது சப் கலக்டர் பதவியில் அமரப்போகும் பிரியதர்ஷினி.
நெய்வேலி பக்கத்துல ஊத்தங்கல்தான் எங்க சொந்த ஊர். வீட்டுல அப்பா அம்மாவை தவிர்த்து என்னோட சேர்த்து வீட்ல மொத்தம் அஞ்சு பேர். நான்தான் மூத்த பொண்ணு. எனக்கு மூணு தங்கச்சி, ஒரு தம்பி. அப்பா ஊத்தங்கல்ல சின்னதா ஹோட்டல் வச்சிருக்கார். பிரமாதமான வருமானம் கிடையாது. கிடைக்கிற சொர்ப்ப வருமானத்துலதான் குடும்பம் ஓடிக்கிட்டு இருந்துச்சு. நான் பிளஸ் டூவுல 1126 மதிப்பெண்கள் பெற்றதால, சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படிச்சேன். படிச்சு முடிச்சவுடனேயே பன்னாட்டு கம்பெனியில சாஃப்ட்வேர் என்ஜினீயர் போஸ்ட் கிடைச்சது. வீட்ல வருமை. நான் வேலைக்குப் போனாதான் தங்கச்சிங்களயும், தம்பியையும் படிக்க வைக்க முடியும். முதல்ல ஹைதராபாத்துலதான் வேலை கிடைச்சது. 40 ஆயிரம் சம்பளம். குடும்பத்துக்காக வேலைக்குப் போனேனே தவிர விருப்பப்பட்டு அந்த வேலையில சேரல. மக்களுக்கு சேவை செய்யணும் இதுதான் ஆசை என்கிறார் குரூப் 1 தேர்வில் தமிழக அளவில் ஆறாம் இடம் பிடித்த அனுஷ்யா தேவி.
சென்னை ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த பழனிகுமார் கூறும்போது, அப்பா பேப்பர் கடை வச்சிருந்தார். பிளஸ் டூவுல அதிகம் மதிப்பெண்கள் கிடைச்சதால, அண்ணா பல்கலைக்கழகத்துல ஈஸியா இடம் கிடைச்சிடுச்சு. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிச்சு முடிச்சேன். அமெரிக்காவில் எம்.எஸ். படிப்பதற்கு இடமும் கிடைத்தது. இருந்தாலும் அமெரிக்காவில் போய் படிக்க மனம் ஒத்துக்கவில்லை. அரசுப் பணியில் சேர்ந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று படிச்சேன். நான் பட்ட கஷ்டத்துக்கு பலனா, இன்னிக்கு டெபுடி கலெக்டர் பதவியில் அமரப்போகிறேன்.
எனக்கு சொந்த ஊர் மதுராந்தகத்திற்கு அருகேயுள்ள அருங்குளம் கிராமம். அப்பா எட்டாம் வகுப்பு வரைக்குத்தான் படித்துள்ளார். படிச்சது எல்லாம் ஊராட்சிப் பள்ளியில்தான். என்ஜினீயரிங் படிக்கறதுக்கு வசதியில்லாததால் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சேன். படிச்சு முடிச்சதும் ஒரு ஐ.டி. நிறுவனத்துல வேலை கிடைச்சது. வேலையில் மனசு ஒட்டல. வேலையை விட்டுட்டு, போட்டித் தேர்வுக்கு படிக்க ஆரம்பிச்சுட்டேன். கிராமத்துல இருந்து படிச்சதால எப்படி படிக்கணும், எந்த புத்தகத்தை தேர்வு செய்து படிக்கணும் என்பதெல்லாம், இரண்டு மூன்று போட்டித் தேர்வு எழுதிய பிறகுதான் தெரிய ஆரம்பித்தது. அதனாலதான், இவங்கள மாதிரி ஒரே வருஷத்துல படிச்சு பாஸ் பண்ணி இந்தப் பதவிக்கு என்னால வர முடியல. இதற்கான உழைப்பு கிட்டத்தட்ட ஐந்து வருஷம் என்று சொல்லும் சதீஷ் தற்போது டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வில் துணைப் பதிவாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஏழு பேரில் பழனிக்குமார், சதீஷ் மட்டும் கொஞ்சம் வித்தியாசமானவர்கள். காரணம் இவர்கள் ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வில் தேர்ச்சிப் பெற்று அரசுத் துறையில் முக்கியப் பதவியில் இருந்துகொண்டேதான் குரூப் 1 போட்டித் தேர்வில் தேர்ச்சிப் பெற்று, இந்தப் பதவியை எட்டிப் பிடித்துள்ளனர். ஆனால், இந்த ஏழு பேரின் ஒட்டுமொத்தக் கனவும், தாங்கள் படித்தப் படிப்பு ஏதேனும் ஒரு வகையில் சமுதாயத்திற்கு பயன்படும் என்பதற்காகத்தான் .
கிடைத்த மிகப்பெரிய சம்பளத்தை உதறிவிட்டு மக்களுக்கு சேவை செய்வதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த ஏழு மாணவர்களும் ஐ.டி. வேலைதான் பிரதானம் என்று ஏங்கும் மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருப்பார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

வரலாறு சொல்லும் ஊராட்சிப் பள்ளி!





புரவலர்கள் திட்டம், கற்றலில் புதுமை, அரசுத் திட்டங்கள் எதுவாயினும் செயல்படுத்தும் மாநில அளவிலான முதல் பள்ளி என்று பல்வேறு பெருமைகளைக் கொண்டு, 80 வருஷத்தை நோக்கி பீடு நடை போடுகிறது, வங்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி.
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் வரவால், தொடக்கப் பள்ளிகள் பல்வேறு மாவட்டங்களில் நலிவடைந்து, சில ஊர்களில் பள்ளிகள் காணாமல் கூட செய்திகள் கூட படித்திருப்போம். ஆனால், 1933 ஆம் ஆண்டு, நாடு சுதந்திரம் அடைவதற்கு முன் பிரிட்டிஷ் காலத்தில் திறக்கப்பட்ட பள்ளி, கம்பீரம் குறையாமல் பல்வேறு வளர்ச்சிகளைத் தொட்டு பல்வேறு சாதனையாளர்களை உருவாக்கி வருகிறது என்றால் அது சாதாரண விஷயமல்ல. பள்ளியின் அலுவலக அறையில் நுழைந்ததும் எங்களுக்கு பெருத்த ஆச்சர்யம். 80ல் தொடங்கி 50 வயது வரை பல்வேறு தரப்பட்ட வயதுகளில் ஊர்ப் பெரியவர்கள். எல்லோரும் அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் என்று அவர்களிடம் பேசியபோதுதான் தெரிந்துகொண்டோம்.
நான் இந்தப் பள்ளியில் சேரும்போது, இந்தப் பள்ளிக்கு வயசு பத்து. அப்போ இந்தப் பள்ளி ஆந்திர மாநிலத்திற்கு உட்பட்ட பகுதியாகத்தான் இருந்தது. மா.பொ. சிவஞானம் அப்போது கன்னியாகுமரி முதல் திருவேங்கடம் வரை அனைத்துப் பகுதிகளையும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவதற்குப் போராடிக்கொண்டிருந்தார். இந்தப் பள்ளி முடித்து உயர்நிலைப் பள்ளிக்குப் போகணும்னா, ஆந்திராவிற்குத்தான் போய் ஆக வேண்டும். நான் இந்தப் பள்ளியில் படிக்கும்போது 200 பேர் படிச்சாங்க. எனக்கு நாலாம் கிளாஸ் நடத்திய நாதமுனி சாரை இன்னிக்கு வரைக்கும் மறக்க முடியல. வங்கனூர்ல இருந்து ஒரு எட்டு பேர்தான் நடுநிலைப் பள்ளிக்கு போகணும்னு விரும்பினோம். எங்க எட்டு பேருக்காக ஆர்.கே. பேட்டையில் ஒரு இடைநிலைப் பள்ளியை அரசு தொடங்கிச்சு. அதுவும் போராட்டத்துலதான் தொடங்கினாங்க. எங்க எட்டுபேர்ல இரண்டு மாணவர்கள் ஒரு விபத்துல இறந்துபோக, இரண்டு பேர் தொடர்ந்து படிக்க வரல. மீதி இருந்தது 4 பேர்தான். 4 பேருக்காக ஸ்கூல் நடத்த முடியாதுனு சொல்லி ஆர்.கே. பேட்டையில் ஸ்கூல மூடிட்டாங்க. எங்களுக்கு படிக்கணும்னு ஆர்வம் இருந்ததால, நாலாம் கிளாஸ் ஆசிரியர் நாதமுனிதான் எங்களுக்கு தொடர்ந்து படிக்க உதவிப் பண்ணினார். நாலுபேருக்கும் வீட்ல வச்சி கிளாஸ் நடத்துவாறு. தனித் தேர்வர்களாக நாங்க நாலுபேரும் ஈ.எஸ்.எல்.சி. படிச்சு பாஸ் பண்ணினோம். எங்கள்ல ரெண்டு பேரு டீச்சர் டிரெயினிங் போனாங்க. நான் எட்டாங்கிளாசுக்கு மேல படிக்கல. இந்தப் பள்ளியை கடந்து செல்லும்போதெல்லாம் நாதமுனி சார் எங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்ததும், எங்கள அவர் கஷ்டப்பட்டு படிக்க வச்சதும்தான் நினைவுக்கு வரும் என்கிறார், 76 வயதுநிரம்பிய எம்.ஜி. பாண்டுரங்கன் என்ற இந்தப் பள்ளியின் பழைய மாணவர்.
பாண்டுரங்கன் நினைவுகூர்ந்த ஆசிரியர் நாதமுனி தமிழ் திரைப்பட இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் (அம்மாவின் அப்பா) தாத்தா ஆவார். இன்னொரு கூடுதலான விஷயம். கே.எஸ். ரவிக்குமார் தன் தொடக்கக் கல்வி முழுவதும் இந்தப் பள்ளியில்தான் படித்தார் என்பது கூடுதல் தகவல்.
1954 - 55 ஆம் ஆண்டுகளில் போராட்டம் தீவிரமடைந்த காலக்கட்டம் அது. அப்போ இந்தப் பள்ளியில்தான் படிச்சிட்டு இருந்தேன். வேலைப் பார்த்த பெரும்பாலான ஆசிரியர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர்களுக்கு தாய்மொழி தெலுங்கு என்பதால், வகுப்பு நடத்துவதும் தெலுங்கில்தான் நடத்துவார்கள். ஆனால், இந்தப்பள்ளி தமிழ்ப் பள்ளி. எங்களுக்கு கொடுக்கப்பட்ட பாடப் புத்தகங்களும் தமிழில்தான் இருக்கும். தெலுங்கில் புரிந்துகொண்டு தமிழில் எழுத வேண்டும். இப்படித்தான் நாங்கள் தொடக்கப்பள்ளியைப் படித்தோம். அப்போதுதான் வடக்கு எல்லைப் போராட்டம் தீவிரமடைந்திருந்தது. 1958 ஆம் ஆண்டிற்கு பிற்பாடுதான் நடுநிலைப்பள்ளி வங்கனூருக்கு வந்தது. அப்போ நாங்க எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தோம். மா.பொ.சிவஞானம் தலைமையில் போராட்ட பொதுக்கூட்டங்கள் நடைபெறும். நாங்க எல்லோரும் கலந்துப்போம். ஒரு கட்டத்துல தீவிர போராட்டத்துல கலந்துக்கிட்ட 47 பேரை போராட்டக்காரங்க லிஸ்ட்டுல அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அதுல நானும் ஒருத்தன் என்கிறார் தியாகி ஜானகிராமன்.
பள்ளியைப் பார்க்கும்போதெல்லாம் என்றோ படித்தோம் என்று நினைவுகளை மட்டும் தங்களுக்குள் சுமக்காமல், இன்றுவரை தங்களால் முடிந்த நல்ல விஷயங்களை இந்தப் பள்ளிக்கு செய்துகொண்டு வருகிறார்கள், இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள். இந்தப் பள்ளியில் நான் கற்ற அரிச்சுவடிதான் என்னை 30 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராக இந்த ஊர் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது என்கிறார் இப்பள்ளியின் முன்னாள் மாணவரும் கவிஞருமான மோகனன். 1970 ஆம் ஆண்டுகளில் சென்னை அகில இந்திய வானொலியில் கீர்த்தனை மட்டுமே ஒலிபரப்பாகும். அப்போது வானொலியின் பணிபுரிந்த அகிலன் மூலமாக முதன் முதலாக சென்னை அகில இந்திய வானொலியில் என்னுடைய பாடல்கள், மெல்லிசைப் பாடலாக வலம் வந்தது என்று சொல்லும் மோகனனின் பாடல்களில் ஒன்று தமிழக அரசுப் பாட நூலில் தமிழ் புத்தகத்தில் எட்டாம் வகுப்பில் செய்யுள்களில் ஒரு பாடலாக இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இந்தப் பள்ளியில் உள்ள குழந்தைகள் இயற்றும் நாடகங்கள், அறிவியல் ஆயிரம் தகவல்கள், ஆண்டுக்கு ஒருமுறை தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி அகில இந்திய வானொலியில் இப்போதும் ஒலிபரப்பப்பட்டு வருகின்றது.
பள்ளியின் வளர்ச்சிக்கு அரசுத் திட்டங்களைத் தாண்டி ஊர் பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் என்று பலரும் தங்களால் இயன்ற உதவிகளைத் தொடர்ந்து அளித்து வருகிறார்கள். அதன் அடையாளம்தான் மாணவர்கள் அமர்ந்து சாப்பிடும் டைனிங் டேபிள். தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசு தொடக்கப்பள்ளியிலும் மாணவர்கள் உணவருந்துவதற்காக இவ்வளவு பெரிய டைனிங் டேபிள் பார்த்திருக்க முடியாது என்று பெருமைப்படுகிறார் இந்தப் பள்ளியின் தமைமை ஆசிரியை அமுதா, இந்த ஊரில் பெரும்பாலானவர்களுக்கு நெசவுத் தொழில்தான். பெரிய வருமானம் என்பதெல்லாம் கிடையாது. அதனால், இப்பகுதியில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம். ஆனால், எங்கள் பள்ளியின் முக்கியத்துவம் குறித்து நாங்கள் செய்த பிரசாரத்தின் பயனாக தற்போது, இந்தக் கிராமத்தில் குழந்தைத் தொழிலாளர்களே கிடையாது. அதுமட்டுமல்லாமல், பள்ளி நேரத்தைத் தவிர படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு, மாலை நேரத்தில் இலவசமாக வகுப்பு நடத்துகிறோம்.
தமிழக அளவில் நடைபெறும் வாசிப்புத் திறன் போட்டியில் தொடர்ந்து எங்கள் பள்ளி மாணவர்கள்தான் முதல் இடத்தில் இருக்கிறார்கள். அதுபோல் புரவலர் திட்டத்திலும் எங்கள் பள்ளிதான் மாநிலத்தில் முதலிடத்தில் இருக்கிறார்கள் என்று நெகிழ்ந்தார் தலைமை ஆசிரியை அமுதா. இந்தப் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் (தலைமை ஆசிரியைத் தவிர) இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் என்பது இன்னொரு ஆச்சர்யமான விஷயம்!
ஆந்திரத்திலிருந்து பெரும் போராட்டத்திற்கு இடையே தமிழகத்திற்கு வந்த இந்த வரலாற்றுப் பள்ளியில் தற்போது பணிபுரியும் தலைமை ஆசிரியை அமுதா, ஆந்திர மாநிலம், நாராயண வனம் எனும் பகுதியைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் தகவல்.

Wednesday, August 10, 2011

இந்திய சுதந்திரம் - பொது அறிவு!



காந்தி 1930 ஆம் ஆண்டு தண்டி யாத்திரையை தொடங்கினார்.
· 1848ஆம் ஆண்டு லார்டு டல்ஹௌசி இந்திய கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.
· மார்ச் 29, 1857ஆம் ஆண்டு மங்கல் பாண்டே சுதந்திரத்திற்கான முதல் விதையை விதைத்தார்.
· 1857ஆம் ஆண்டு சிப்பாய்க்கழகம் மூலம் சுதந்திரத்திற்கான முதல் போராட்டம் வெடித்தது.
· தேசியப் பாடலான வந்தே மாதரம் முதன் முதலில் 1896ஆம் ஆண்டு பாடப்பட்டது.
· பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்திய சுதந்திரச் சட்டம் ஜூலை முதல் தேதி 1947ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
· சுதந்திரத்திற்கான முதல் கிளர்ச்சி மே 10, 1857ஆம் ஆண்டு ஏற்பட்டது.
· இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் உமேஷ் சந்திர சட்டர்ஜி. இந்திய தேசிய காங்கிரஸ் 1885ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
· 1908ஆம் ஆண்டு பத்திரிகைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
· இந்தியாவின் தேசிய கீதமான ஜன கன மண முதன்முதலில் 1911ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி கொல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் பாடப்பட்டது.
· 1912ஆம் ஆண்டு இந்திய தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து டில்லிக்கு மாற்றப்பட்டது.
· 1916ஆம் ஆண்டுதான் முதன்முதலில் சரோஜினி நாயுடு காந்தியை சந்தித்தார்.
· அமிர்தசரசில் உள்ள ஜாலியன் வாலாபாக் என்னும் இடத்தில்ரெஜினால்ட் டயர் என்னும் ஆங்கிலேயரால் ஏப்ரல் 13, 1919ஆம் ஆண்டு வரலாற்றில் மறக்கமுடியாத படுகொலை நடந்தது.
· திலகர் 1920ஆம் ஆண்டு இறந்ததையடுத்து காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
· 1921ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவராக காந்தி பொறுப்பேற்றார். அவர் தலைமை பொறுப்பேற்று நடந்த முதல் போராட்டம் ஒத்துழையாமை இயக்கம்.
· 1922ஆம் ஆண்டு சுயராஜ்ஜிய இயக்கத்தை தோற்றுவித்தவர் - சி.ஆர். தாஸ் மற்றும் மோதிலால் நேரு
· 1923 ஆம் ஆண்டு உப்பு மீதான வரி விதிக்கப்பட்டது.
· பகத்சிங் 1923ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார். அப்போதுஅவருக்கு வயது 23.
· வெள்ளையனே வெளியேறு போராட்டம் குறித்த அறிவிப்பு இந்திய தேசிய காங்கிரஸின் பம்பாய் கூட்டத்தின் போது வெளியிடப்பட்டது.
· 1928 ஆம் ஆண்டு சைமன் கமிஷன் இந்தியா வந்தது.
· 1929 ஆம் ஆண்டு லார்டு இர்வின் பிரபு இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்க ஒப்புக்கொண்டார்.
· இந்திய தேசிய காங்கிரஸ் தலைமைப் பதவியில் இருந்து காந்திஜி 1930ஆம் ஆண்டு விலகினார். தலைமைப் பதவி குறித்து தவறுதலான குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் தொடர்ந்து வந்ததால் காந்தி இந்த முடிவை மேற்கொண்டார்.
· 1930 உப்பு சத்தியாக்கிரகம் காந்தி தலைமையில் நடைபெற்றது.
· 1931, 1932ஆம் ஆண்டுகளில் இரண்டாம் மற்றும் மூன்றாம் வட்டமேஜை மாநாடு நடைபெற்றது.
· புனேயில் உள்ள ஆகாகான் கோட்டையில் 1940ஆம் ஆண்டு காந்தி வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
· வெள்ளையனே வெளியேறு போராட்டத்திற்காக சரோஜினி நாயுடு 1942ஆம் ஆண்டு காந்திஜியுடன் சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட இந்த சிறைவாசம் 21 மாதம் இருந்தது.
· 1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டம் தீவிரமடைந்திருந்த சமயத்தில் இந்திய தேசிய காங்கிரஸின் செயல்பாட்டினை ஒலிபரப்பும் வகையில் ரகசியமாக காங்கிரஸ் ரேடியோ ஒலிபரப்பானது. இந்த ரேடியோ ஒலிபரப்பு மூன்று மாதமே செயல்பட்டது. இந்த ரேடியோ ஒலிபரப்பு மும்பையில் சில இடங்களில் இருந்து செயல்படுத்தப்பட்டது. இதை முற்றிலுமாக தொகுத்து ஒலிபரப்பியவர் உஷா மேத்தா.
· காந்திஜியை முதன் முதலில் இந்தியாவின் தந்தை என்று சொன்னவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். 1944ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதி சிங்கப்பூரில் உள்ள ஆஸாத்ஹிந்த் ரேடியோவில் சுபாஷ் சந்திரபோஸ் தேச விடுதலை குறித்து உரையாற்றும்போது காந்தியை அவ்வாறு கூறினார்.
· அருணா ஆசாஃப் அலி என்பவர்தான் 1942ஆம் ஆண்டு நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போõராட்டத்தின் கதாநாயகி என்று வர்ணிக்கப்படுகிறார்.
· 1947 ஜூன் 3ஆம் தேதி மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, இந்தியாவை பிரிக்க திட்டம் வகுத்தார்.
· 1947 ஆகஸ்ட் 15 இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது.
· தேசிய கீதம் வங்களா மொழியில் ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்டது. 1950ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி இந்தப் பாட்டு தேசிய கீதத்திற்கான அங்கீகாரத்தை இந்திய அரசியலலைப்பு அங்கீகராம் அளித்துள்ளது.
· சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று முழங்கியவர் பால கங்காதிர திலகர்
· இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பிரிட்டிஷின் பிரதமராக இருந்தவர் கிளெமண்ட் அட்லி.
· சாரே ஜஹான்சே அச்சா எனும் சுதந்திர வேட்கையைத் தூண்டும் இந்திப் பாடலை எழுதியவர் முகமது இக்பால்.
· காங்கிரஸில் கட்சியின் மூன்று முறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தாதாபாய் நௌரோஜி.
· இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் சக்ரவர்த்தி ராஜகோபாலச்சாரி.


ஆகாய உச்சிதான் எங்கள் லட்சியம்!



நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்!
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்;
நான் பிறந்தேன் கனவுடன் ;
வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்
நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த
நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்
நான் பிறந்தேன் ஆகாயத்தின் உச்சியில் பறக்க
நான் பூமியில் ஒருபோதும் தவழ மாட்டேன்
தவழவே மாட்டேன்.
ஆகாய உச்சிதான் என் லட்சியம்.

என்ற தன்னம்பிக்கை வரிகளை அந்த அரங்கத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மாணவர்களின் உதடுகள் திரும்பச் சொல்ல தொடங்கியது, குரோம்பேட்டை எம்.ஐ.டி. வளாகத்தில் நடைபெற்ற முதலாமாண்டு மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி. அரங்கத்தின் ஒட்டுமொத்த மாணவர்களையும் தன் தன்னம்பிக்கை வரிகளில் கட்டிப்போட்ட அந்த சிறப்பு விருந்தினர் இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே. அப்துல்கலாம்.
முதல் ஆண்டு மாணவர்களுக்கு அடிப்படை பயிற்சி அளிக்கும் இந்த முகாமில் பழைய மாணவர் என்ற முறையில் உங்களிடம் பேச வந்திருக்கிறேன். எனக்கும் இந்த எம்.ஐ.டி. கல்வி நிலையத்திற்கும் நீண்ட நாள் உறவு உண்டு. 1954ஆம் ஆண்டு, உங்களைப்போல் நானும் முதலாமாண்டு மாணவராக இந்தக் கல்வி நிலையத்திற்குள் நுழைந்தேன். என் பெற்றோர் இந்த கல்வி வளாகத்திற்குள் என்னை விட்டு விட்டுச் சென்றார்கள். 1954ஆம் ஆண்டு முதல் 1957ஆம் ஆண்டு வரை இந்த கல்வி நிலையத்தில் நான் கற்றுக்கொண்ட பாடம்தான் என்னை ஆராய்ச்சியாளராக இந்த சமுதாயத்திற்கு அடையாளம் காட்டியது.
இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த சமயம் அது. நான் தேர்வில் முதல் மாணவராக தேர்ச்சிப் பெற்றிருந்தேன். வகுப்பில் குரூப் போட்டோ எடுக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். என் பேராசிரியர் பெயர் பாண்டோ. நான் மாணவர்கள் அமர்ந்திருக்கும் மேல் வரிசையில் ஓரமாக நின்றுகொண்டிருந்தேன். எங்கள் பேராசிரியர்கள் கீழ் வரிசையில் அமர்ந்திருந்தார்கள். போட்டோகிராபர் போட்டோ எடுக்க தயாராகிக்கொண்டிருந்தபோது, சட்டென்று பேராசிரியர் என்னை அழைத்தார். கலாம் என் மாணவன். இந்த ஆண்டு அவன் முதல் மதிப்பெண்ணில் தேர்ச்சிப் பெற்றிருக்கிறான். அவன் என்னோடு சேர்ந்து அமர்வதைத்தான் நான் பெருமையாக நினைக்கிறேன் என்றார். அந்த நிகழ்ச்சி என்னை பெரிதும் நெகிழச் செய்தது. அந்த நிகழ்வு, என்னை அடுத்த ஆண்டும் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்ற வேட்கையை தூண்டியது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் மந்திரக்கோல். மாணவர்களை மனந்திறந்து பாராட்டுங்கள். உங்கள் பாராட்டு அவர்களை மென்மேலும் உயர்ந்தும் மந்திரச் சொல் என்பதை மறந்துவிடாதீர்கள்.
அதேபோல் இன்னொரு மறக்க முடியாத சம்பவமும் இதே வளாகத்தில் நடந்தது. அப்போது நான் மூன்றாம் ஆண்டு ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரங் படித்துக்கொண்டிருக்கிறேன். மூன்றாம் ஆண்டு இறுதியில் ஸ்டூடண்ட் புராஜக்ட் வடிவமைத்துக் கொடுக்க வேண்டும். ஸ்டூடண்ட் புராஜக்ட் வடிவமைக்க ஆறு மாதம் கொடுப்பார்கள். எங்களின் வழிகாட்டி பேராசிரியர் ஸ்ரீனிவாசன். அவர் மிகவும் கண்டிப்பானவர். சிஸ்டம் டிசைன், ஏர்கிராப்ட் வடிவமைப்பதில் அவர் மிக திறமைசாலி. எங்கள் குழுவில் மொத்தம் எட்டுபேர். அதில் என்னுடைய பங்கு சிஸ்டம் டிசைன் மற்றும் சிஸ்டம் இண்டக்ரேஷன், மற்ற மாணவர்கள் ஏர்கிராப்ட்டின் மற்றப் பணிகளை கவனித்துக்கொள்வார்கள். புராஜக்ட் கிட்டத்தட்ட முடிவடையும் தருணம் அது. அப்போதெல்லாம் கம்ப்யூட்டர் வசதி கிடையாது. சிஸ்டம் வடிவங்களை முழுவதும் கைப்பட வரைந்து ஆக வேண்டும். மிகவும் சிரமப்பட்டு புராஜக்ட்டை வடிவமைத்திருந்தோம். பேராசிரியர் ஸ்ரீனிவாசன் எங்களிடம் வந்தார். என்னிடம் புராஜக்ட் விவரங்களை கேட்டார். நானும் கொடுத்தேன். சிஸ்டம் டிசைன் சம்பந்தமான நான் தொகுத்து வைத்திருந்த விவரங்களைப் பார்த்த அவரின் முகம் சுருங்கியது. உன்னிடம் நிறைய விஷயங்கள் எதிர்பார்த்திருந்தேன். ஆனால், நீ தொகுத்திருக்கும் விஷயங்கள் சரியாக இல்லை என்று கடினமாக கோபித்துக்கொண்டவர், இன்று வெள்ளிக்கிழமை. இன்னும் இரண்டு நாள் உங்களுக்கு அவகாசம். திங்கள்கிழமை திருத்தப்பட்ட திட்ட வடிவமைப்பு என்னிடம் சமர்ப்பிக்கவேண்டும். புராஜக்ட்டை சமர்ப்பிக்காவிட்டால், உனக்கு அரசு அளிக்கும் ஸ்காலர்ஷிப்பை ரத்து செய்துவிடுவேன் என்று சொல்லி சென்றுவிட்டார். எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. ஸ்காலர்ஷிப்பில் படித்துக்கொண்டிருந்த எனக்கு, அவர் சொன்ன வார்த்தை கஷ்டமாய் போனது. ஆனால் சோர்ந்து அமர்ந்துவிடாமல், இரண்டு நாள் தூங்காமல், சாப்பிடாமல், புதிய புராஜக்ட்டை தயாரித்தோம். வெள்ளிக்கிழமை இரவு, சனிக்கிழமை இரவும் தூங்கவில்லை, புதிய புராஜக்ட்டை ஞாயிற்றுக்கிழமை காலையில் பேராசிரியர் ஸ்ரீனிவாசனிடம் சமர்ப்பித்தோம். மனதெல்லாம் பயங்கர பயம். புராஜக்ட்டை முழுவதுமாக படித்துப் பார்த்த பேராசிரியர். கொடுக்கப்பட்ட மிகக் குறுகிய காலத்தில் புதிய புராஜக்ட்டை வடிவமைத்த எங்களை வெகுவாகப் பாராட்டியதோடு. சிறந்த புராஜக்டாக எங்களின் திட்டத்தை தேர்வு செய்தார்.
எலக்ட்ரிக் பல்பை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், டெலிபோனை கண்டுபிடித்த கிரஹாம்பெல், விமானத்தை கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள் போல, இந்தியாவில் கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் போன்றவர்கள் கல்வியில் மேதைகள் இல்லை ஆனால், இன்று நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இவர்கள் செய்த அறிய கண்டுபிடிப்பு இருக்கிறது. அதற்கு அவர்கள் மேற்கொண்ட அயராத கடின உழைப்பும், தங்கள் துறையில் இருந்து பற்றுதலே ஆகும். அதேபோல நீங்களும் கடின உழைப்பை உங்கள் துறையில் காட்டுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் எடிசனைப் போன்று, பெல்லைப் போன்று படைப்பாளிகள் என்ற எண்ணத்தை நெஞ்சில் உரமிட்டுக்கொள்ளுங்கள். விடா முயற்சி, தொடர்ந்து அறிவை மேம்படுத்துதல், கடின உழைப்பு ஆகியவை உங்களை சிறந்த ஆராய்ச்சியாளனாக மாற்றும்.
2020ஆம் ஆண்டிற்குள் இந்தியா வல்லரசாக வேண்டும். அதற்கு இன்னும் ஒன்பது ஆண்டுகளே இருக்கிறது. நம் இந்தியா வல்லரசு ஆவதற்கு. இந்தியாவில் விவசாயம் வளர்ச்சியடைய வேண்டும். கல்வி அதிலும் பெண்கல்வி மேன்மை அடைய வேண்டும். இந்தியாவில் இருக்கும் 6 லட்ச கிராம மக்களுக்கும் தகவல் பரிமாற்ற வசதிகள் பெற்றிருக்க வேண்டும். எல்லா மக்களும் பயன்படுத்தும் வகையில் இடையூரு இல்லா போதிய போக்குவரத்து. இவற்றையெல்லாம் பூர்த்தி செய்துவிட்டால், நம் வல்லரசுக் கனவை எளிதில் எட்டிவிடலாம் என்று நம்பிக்கை வரிகளை மாணவர்களிடம் விதைத்தார் கலாம்.
நிகழ்ச்சியில் மாணவர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு கலாம் அளித்த சுவாரஸ்யமான பதில்கள்:
அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் செவ்வாய்க்கும், வியாழனுக்கும் ராக்கெட் அனுப்பி ஆராய்ச்சி மேற்கொண்டிருக்கும் சமயத்தில் நாம் இன்னும் அந்தளவிற்கு வளர்ச்சியை எட்டவில்லையே...
கண்டிப்பாக எட்டுவோம். அதற்கு நம்பிக்கை வேண்டும். என்னால் செய்ய முடியும் என்று நம்புவோம். அடுத்து நம்மால் செய்ய முடியும் என்று நம்பினால், இந்தியாவாலும் முடியும் என்பது நிரூபணம் ஆகும்.
இந்தியா லஞ்சமே இல்லாத நாடாக எப்போது மாறும் ?
நூறு கோடி மக்கள்தொகையை கடந்துவிட்டோம். இந்தியாவில் 200 மில்லியன் வீடுகள் இருக்கிறது. இந்த ஒவ்வொரு வீட்டிலும் அம்மா அப்பா, இரண்டு மகள் ஒரு மகன். அல்லது இரண்டு மகன் ஒரு மகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இந்த வீட்டில் அம்மா அல்லது அப்பா தங்களின் வீட்டின் அத்தியாவசிய தேவைக்கு அதிகமாக, சம்பாதிக்கத் தூண்டுவதுதானே லஞ்சம். இதை எத்தனை மகள்கள் எத்தனை மகன்கள் தட்டிக் கேட்டுள்ளீர்கள். லஞ்சமாக பெற்ற பணத்தில் வாங்கி வரும் பொருளை தொட மாட்டேன் என்று எத்தனை மகள்கள் அல்லது மகன்கள் வீட்டில் தகப்பனாரிடம் தட்டிக் கேட்டுள்ளீர்கள்? ஒரு வீட்டில் பெறப்படும் லஞ்சம்தான் இந்த நாட்டில் நிலவும் லஞ்சம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளை நான் மிகப்பெரும் ஆயுதமாக நான் கருதுகிறேன். எந்தக் குழந்தையின் பேச்சையும் பெற்றோர் கேட்க தவறியதில்லை. நீங்கள் உங்கள் தந்தையுடன் லஞ்சம் வாங்காதீர்கள் என்று கண்டிப்புடன் சொல்லுங்கள்.. அப்போது பாருங்கள் இந்தியா லஞ்சம் இல்லாத நாடாக மாறிப்போகும்.
நாங்கள் எல்லோரும் உங்களைப்போல் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால், நீங்கள் யாரைப்போல் ஆகவேண்டும் என்று விரும்பினீர்கள்? கனவு கண்டீர்கள்?
எனக்கு அப்போ 10 வயது. ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். என் அறிவியல் ஆசிரியர் சிவ சுப்பிரமணிய ஐயர். அவர் கரும்பலகையில் ஒரு பறவையின் இறக்கை, வால், தலை இவற்றையெல்லாம் தனித்தனியாக வரைந்து, இந்தப் பறவை எப்படி பறக்கிறது என்று எங்களிடம் கேட்பார். நான் வெளியில் வந்து பார்ப்பேன். வானத்தில் பறவைகள் பறந்துகொண்டிருக்கும். இந்த பறவைப் பறப்பதன் தொழில்நுட்பம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையும், நான் கண்ட கனவும்தான் எம்.ஐ.டிக்கு என்னை அழைத்து வந்தது. ராக்கெட் என்ஜினீயராக என்னை வளர்த்தது.
தலைமைதாங்கும் நாடாக எப்போது இந்தியா மாறும்?
தலைமை என்ற வார்த்தை தவறு. எப்போது நூறு கோடி மக்களும், அமைதியான, சந்தோஷமான வாழ்வை அனுபவிக்கிறார்களோ அதுவே சிறந்த நாடு. அதைப்போல நம் நாடு விரைவில் மாற வேண்டும். அதற்கு ஆக்கப்பூர்வமான நம்பிக்கை நாம் ஒவ்வொருவரும் விதைக்க வேண்டும்.
வெளிநாட்டு ஊதியத்திற்காக பல மாணவர்கள் நம் நாட்டில் கிடைத்த மிகப்பெறும் கல்வியறிவை, அனுபவத்தை வேறொரு நாட்டிற்கு செலவழிக்கிறார்களே..
திரைகடல் ஓடியும் திரவியம் தேடுன்னு சொல்லி வச்சிருக்காங்க. இது நம்நாட்டின் மரபு. கலாசாரம். இதை ஏன் மாற்ற வேண்டும். வெளிநாட்டிற்கு செல்லும் நம் மாணவர்களின் எண்ணிக்கை, ஒரு சதவீதம் மட்டுமே. மீதியுள்ள 99 சதவீத அறிவார்ந்த மாணவர்கள் நம் நாட்டில்தானே இருக்கிறார்கள். இந்த மாணவர்கள் நம்பிக்கையை விதைத்தால், வெளிநாடுகளைப்போல் நம் நாடும் வல்லரசாகத்தானே செய்யும்.
இட ஒதுக்கீடு பிரச்சினையால் மாணவர்கள் சிறந்த கல்வியை பெற முடியாமல் போய்விடுகிறதே?
அதிகப்படியான கல்வி நிலையங்களின் வரவால், இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் கூடுதலாக இடங்கள் இன்னும் காலியாகவே இருக்கிறது. சேருவதற்கு மாணவர்கள் இல்லை என்ற நிலையே இருக்கிறது. இந்த நிலை இன்னும் பத்து ஆண்டுகளில் மருத்துவம், மேலாண்மை, பயோ டெக்னாலஜி, பயோ மெடிக்கல் போன்ற துறை வரை விரியும். அதற்கு கூடுதலாக எல்லாத் துறைகளிலும் கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும். கல்வி நிலையங்கள் கூடுதல் இருந்தால், இட ஒதுக்கீடு என்ற ஒன்றே இல்லாமல் போய்விடும். விருப்பப்பட்ட பிரிவை மாணவர்கள் படிகும் நிலை மலரும்.


Thursday, July 28, 2011

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி., புள்ளியியல்




பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், புள்ளியியல்துறை புதிதாக துவங்கப்பட்டுள்ளது.
உற்பத்தி திறனாளிகளின் தரம் அறிதல், கூறு எடுத்தல், மருந்து மற்றும் மருத்துவம் சார்ந்த பரிசோதனை, உயிரியல், பரிசோதனைகள், சுற்றுச்சூழல் கல்வி, பொருளாதார ஆய்வுகள், கல்வி, சமூக அறிவியல், பொறியியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஆராயத்தக்க திறன் வாய்ந்த பட்ட மேற்படிப்பு மாணவர்களை உருவாக்குவது இத்துறையின் நோக்கமாகும். இத்துறையில் புதிய 2 ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு எம்.எஸ்சி., புள்ளியியல் (கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்) துவங்கப்பட்டுள்ளது. இதில், சேருவதற்கான தகுதி பி.எஸ்சி.,யில் புள்ளியியல், கணிதவியல், கணினி அறிவியல் (புள்ளியியல், கணிதம்), பி.சி.ஏ.,வில் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் (புள்ளியியல், கணிதம்) ஆகியவையாகும். புள்ளியியல் படிப்பில் சேர்ந்து பயில விருப்பம் உள்ளவர்கள் ஜெய்சங்கர், உதவி பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், புள்ளியியல் துறை, பாரதிதாசன் பல்கலை திருச்சி என்ற முகவரியிலும், 94444-69629 என்ற மொபைல்ஃபோன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இக்னோவில் புதிய படிப்புகள்



இந்திராகாந்தி தேசிய திறந்த வெளிப் பல்கலைக்கழகத்தில் ஹெல்த் சயின்சஸ், சைனிஸ் மொழி படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இக்னோவின் ஸ்கூல் ஆப் ஹெல்த் சயின்ஸ் (எஸ்.ஓ.எச்.எஸ்.,) பிரிவில், எச்.ஐ.வி., மெடிசன் பி.ஜி., டிப்ளமோ படிப்பும், டயாலிசிஸ் மெடிசன் சான்றிதழ் படிப்பும் துவங்கப்பட்டுள்ளது.
இந்த படிப்புகளை இக்னோ, நேஷனல் எய்ட்ஸ் கன்ட்ரோல் அமைப்பு (என்.ஏ.சி.ஓ.,), பொதுநல மருத்துவ இயக்குனரகத்துடன் (டி.ஜி.எச்.எஸ்.,) இணைந்து துவக்கியுள்ளது. இதற்கு மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் முழு நிதியுதவி வழங்குகிறது. மருத்துவ படிப்பு முடித்த மாணவர்கள் இதில் சேர்ந்து பயனடையலாம்.

புதிய படிப்பு!



மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. நிர்வாகவியல் (சி.பி.எஸ்.சி.) பட்டப் படிப்பு நடப்புக் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் சேர விரும்பும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு இளநிலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நுழைவுத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில், விண்ணப்பதாரர்கள் இப்படிப்பில் சேர அனுமதிக்கப்படுவர். வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரம் முதல் தொடங்கும். மேலும் தகவல்களுக்கு 0452-2458231, செல்போன் 9443047400 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை பல்கலைக்கழகம் புதிய படிப்புகள் அறிமுகம்



தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், புதிய முதுகலை பட்டப் படிப்பு மற்றும் பட்டயப் படிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக துணைவேந்தர் பிரபாகரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவப் பல்கலைக் கழகம் மூலம் உயிர் புள்ளியியல் (எம்.வி.எஸ்சி.,), உணவு பதனிடும் தொழில்நுட்பம் (எம்.டெக்.,) ஆகிய பாடங்களில் முதுகலை பட்டப் படிப்பும், சுற்றுப்புறச் சூழல் மாறுபாடும், மீன் வளமும் என்ற முதுகலை பட்டயப் படிப்பும் (எம்.பில்.,) இவ்வாண்டு (2011 - 2012) துவங்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் முதன் முறையாக தனியார் கால்நடை மருத்துவர்கள் மற்றும் தொழில் முனைய விரும்பும் அறிவியல் பட்டதாரிகள் பயன் பெறும் வகையில், தொலைக்கல்வி மற்றும் கணினி தொடர்பு மூலம் முதுகலை பட்டயப் படிப்புகளும் துவங்கப்பட்டுள்ளன. கால்நடை கண் மருத்துவம், அவசர மற்றும் தீவிர சிகிச்சை, வர்த்தக ரீதியான கோழிப் பண்ணை மேலாண்மை, தீவன உற்பத்தி தொழில்நுட்பம், பாரம்பரிய சிகிச்சை மற்றும் மாறுபட்ட கோழியின வளர்ப்பு (காடை, வான்கோழி, ஈமு கோழி வளர்ப்பு) ஆகிய பாடத் தலைப்புகளில் முதுகலை பட்டயப் படிப்புகள் துவங்கப்படுகின்றன.

கடனை திரும்பச் செலுத்த கால நீட்டிப்பு!



உயர்கல்விக்காக வாங்கும் கடனை திரும்பச் செலுத்துவதற்கான காலக்கெடுவை ஏழு ஆண்டுகளில் இருந்து, 15 ஆண்டுகளாக விரைவில் நீட்டிப்பு செய்யப்படும் என்று, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
உயர்கல்விக்காக, மத்திய அரசு 43 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது. தகுதி வாய்ந்த அனைத்து மாணவர்களும், உயர்கல்வி படிப்பதற்காக வங்கிகளில் கடன் பெறலாம் என்றும், கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கு ஏழு ஆண்டுகள் காலக்கெடுவும் ஏற்கனவே மத்திய அரசு நிர்ணயித்திருந்தது. இந்நிலையில் இக்காலக்கெடுவை, 15 ஆண்டுகளாக நீடிக்கச் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக, மத்திய அரசு விரைவில் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கு வரும் மாணவர்களை வேலை வாங்கினால் கிரிமினல் நடவடிக்கை!




மாணவர்களை டீ, பிஸ்கெட் வாங்கி வரச் சொல்வது, கழிவறைகளை சுத்தம் செய்யச் சொல்வது போன்ற விரும்பத்தகாத செயல்களில் மாணவர்களை ஈடுபடுத்தினால், இனி ஆசிரியர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை பாயும் என, தொடக்க கல்வித்துறை எச்சரித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஒன்றியம் விளை கிராமத்தைச் சேர்ந்த தனசேகரன் என்பவர், விளை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தங்களது தேவைக்காக, அப்பள்ளியில் பயிலும் மாணவர்களை வெளியில் அனுப்பி டீ, பிஸ்கெட் மற்றும் தின்பண்டங்களை வாங்கிவரச் செய்வதாகவும், ஆசிரியர்களின் வாகனங்களை சுத்தம் செய்தல், ஆசிரியர்களின் கழிவறைக்கு தண்ணீர் கொண்டு வைத்தல், கழிவறையை சுத்தம் செய்தல் போன்ற பணிகளுக்கு மாணவர்களை ஈடுபடுத்துவதாகவும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கையடுத்து தொடக்கக் கல்வித் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

புது திட்டம்!


மாணவர்களின், பாடப் புத்தக சுமையை குறைக்கும் வகையில், அடுத்த கல்வியாண்டு முதல் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என, மூன்று தேர்வுகளுக்கும், ஒவ்வொரு பாடத்திற்கும் மூன்று பாடப் புத்தகங்களை வழங்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழ், அறிவியல், கணிதம் என, எந்தப் பாடப் புத்தகமாக இருந்தாலும், ஆண்டு முழுவதும் தடிமனான பாடப் புத்தகங்களை, மாணவர்கள் சுமந்து செல்ல வேண்டியுள்ளது. காலாண்டுத் தேர்வுக்கு குறிப்பிட்ட பாடப் பகுதிகளும், அரையாண்டுத் தேர்வுக்கு காலாண்டுத் தேர்வுடன், அரையாண்டுத் தேர்வுக்கு உட்பட்ட கூடுதல் பாடப் பகுதிகளுடன் மாணவர்கள் படிக்க வேண்டும். முழு ஆண்டுத் தேர்வுக்கு, ஒட்டுமொத்த பாடத்தையும் படிக்க வேண்டும். இதனால், மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதோடு, அதிக புத்தக சுமையால் மாணவர்களுக்கு முதுகுத்தண்டில் பாதிப்பு ஏற்படுவதாகவும் பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதையடுத்துதான் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்த பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
அதன்படி, அடுத்த கல்வியாண்டிலிருந்து ஒவ்வொரு பாடத்திற்கும், காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என, மூன்று தேர்வுகளுக்கும், மூன்று பிரிவுகளாக பிரித்து, சிறிய அளவில் பாடப் புத்தகங்களை அச்சிட்டு வழங்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் அமலுக்கு வந்ததும், தேர்வு முறைகளிலும் மாற்றம் கொண்டு வரப்படும். அரையாண்டுத் தேர்வில், காலாண்டுத்தேர்வுக்கான பாடப் பகுதிகளும், முழு ஆண்டுத் தேர்வில், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு பாடப் பகுதிகளும் இடம் பெறாது. அந்தந்த தேர்வுக்குரிய பாடப் பகுதிகளிலிருந்து மட்டும் கேள்விகள் கேட்கப்படும்.

Saturday, July 9, 2011

எல்.எல்.ஆர். வாங்குவது ஈஸி!



இரண்டு சக்கரம், நான்கு சக்கர வாகனங்களுக்கு எல்.எல்.ஆர். லைசன்ஸ் பெறுவதற்கு இனி கால்கடுக்க ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நிற்க வேண்டாம். சரியான விண்ணப்பம், வீட்டு முகவரி, பிறப்புச் சான்றிதழ் அல்லது பத்தாம் வகுப்பு சான்றிதழ் நகல், சாலை விதிகளை முறையாக தெரிந்துகொண்டு, எல்.எல்.ஆர். பெறுவதற்கான அரசு நிர்ணயித்த கட்டணத் தொகைக்கான கட்டண வரைவோலையை எடுத்துக்கொண்டு, பொறியியல் கல்லூரி, கலைக்கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி என்று எந்த கல்வி நிலையத்தின் முதல்வரிடமும் சென்று, எல்.எல்.ஆர். லைசென்ஸ் பெற்றுவிடலாம். அட.. நல்லாயிருக்கே என்று முகம் மலரும் நம்மவர்களுக்கு சிறிய அதிர்ச்சி. இது அத்தனையும் இங்கல்ல. சண்டீகர் மாநிலத்தில். இந்த சட்டத்தை தற்போது பஞ்சாப் மாநிலமும் பின்பற்ற யோசித்து வருகிறது. நம் மாநிலத்தில் எப்போது?

பள்ளிக்கு வருவதற்கு உதவித்தொகை!

தூரம் அதிகமாக இருப்பதால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துபோகிறது என்பதை புரிந்துகொண்ட இமாச்சல் பிரதேச அரசு அம்மாநில மாணவர்களுக்கு பள்ளிக்கு வந்து படித்துச் செல்ல உதவித்தொகை அறிவித்துள்ளது.
பள்ளியிலிருந்து மூன்றிலிருந்து 5 கி.மீ. தூரம் வரை உள்ள மாணவர்களுக்கு மாதம் இருநூறு ரூபாயும், ஐந்திலிருந்து எட்டு கி.மீ. தூரம் உள்ள மாணவர்களுக்கு மாதம் 300 ரூபாயும் உதவித்தொகை அறிவித்துள்ளது. இதன்மூலம் மாணவர்கள் பள்ளிக்கு கண்டிப்பாக வருவார்கள். பள்ளி இடைநிற்றல் விகிதம் குறையும். தங்கள் மாநிலத்தில் கல்வி அறிவு விகிதம் அதிகரிக்கும் என்று நம்புகிறது இமாச்சல் அரசு. இந்த உதவித்தொகை மூலம் 22,500 மாணவர்கள் உதவிபெருவார்கள். இமாச்சல் பிரதேச மாநிலத்தில் 15 ஆயிரம் தொடக்க மற்றும் மேல்நிலை அரசுப் பள்ளிகள் இருக்கிறது என்பது கூடுதல் தகவல்கள்.

விவசாயிகளுக்கான பட்டப் படிப்பு!



தொலைநிலைக் கல்வி மூலம் விவசாயிகளுக்கான பி.எஃப்.டெக். பட்டப் படிப்பை படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் விவசாயிகளுக்கான இளநிலை பண்ணை தொழில்நுட்பப் பட்டப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நிலத்தைப் பண்படுத்துதல் முதல் அறுவடை வரையிலும், தானியங்களை சேமித்தல், பதப்படுத்துதல், மதிப்பூட்டுதல் வரை அனைத்து தொழில்நுட்பங்களையும் அறிந்துகொள்ளலாம். பயிற் உற்பத்தி, பயிர்ப் பாதுகாப்பு, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், மனையியல், வேளாண் பொருளாதாரம் மற்றும் சந்தைப்படுத்துதல், வனவியல், கால்நடை மேலாண்மை, சிறுதொழில் முனைதல், தகவல் தொழில்நுட்பம், பண்ணை பார்வையிடல் ஆகியவற்றை இந்தப் பட்டப் படிப்பில் படிக்கலாம்.
இப்படிப்பில் சேருவதற்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருந்தால் போதும். 27 வயது நிரம்பிய அனைவரும் இந்தப் படிப்பில் சேர முடியும். திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கம், கோவை; வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை; வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிகுளம்; தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறை; வேளாண் அறிவியல் மையம், திண்டிவனம்; வேளாண் அறிவியல் மையம், சந்தியூர் ஆகிய பயிற்சி மையங்களில் இப்படிப்பு கற்றுக்கொடுக்கப்படுகிறது. விண்ணப்பங்களை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண் அறிவியல் மையங்களில் ரூ.100 செலுத்தி நேரிலோ அல்லது வரவோலை மூலமாகவே பெறலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை இயக்குநர், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை - 3 என்ற முகவரிக்கு பயிற்சிக் கட்டணம் ரூ.7,500க்கான வரைவோலையுடன் அனுப்ப வேண்டும்.

குரூப் 2 தேர்வு முடிவு எப்போது?



டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு இம்மாதம் 30ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு முடிவு வெளியிடப்படாததால், ஏற்கெனவே தேர்வு எழுதிய மாணவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக இருக்கும் 4,500 காலிப் பணியிடங்களுக்கு இந்த மாதம் ஜூலை 30 ஆம்தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்விற்கு இந்த ஆண்டு 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். ஜூன் 19ஆம் தேதி நடக்கவிருந்த இந்தத் தேர்வு, பல்வேறு காரணங்களால் ஜூலை 3ஆம் தேதிக்கும் ஒத்திப்போடப்பட்டது. பிறகு கூடுதலாக பணியிடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டதால், தேர்வு ஜூலை 30ஆம் தேதிக்கும் மாற்றியமைக்கப்பட்டதோடு, புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாநில பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது. வழக்கமாக குரூப் 2 தேர்வு நடத்தும்போது, அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டப் பிறகுதான், புதிய காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும். இதுதான் வழக்கம். ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான இறுதிப்பட்டியல் வெளியிடப்படாத சூழலில் புதிதாக இம்மாதம் நடைபெறவிருக்கும் இந்தத் தேர்வு, பழைய மாணவர்களை கவலையடைய செய்துள்ளது.
இதுகுறித்து, கடந்த ஆண்டு குரூப் 2 தேர்வில் தேர்ச்சிப் பெற்று இறுதிப்பட்டியலை எதிர்கொண்டிருக்கும் மாணவர்கள் என்ன சொல்கிறார்கள், ஓர் அலசல்:
சத்யா (கடலூர்): 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு வெளிவந்தது. ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வை 2008ஆம் ஆண்டு எழுதியிருக்கிறேன். முதல் முறையாக நான் எதிர்கொண்ட தேர்வில் தேர்ச்சியடைய முடியவில்லை. மனம் தளராமல் தொடர்ந்து பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தேன். என் முழு நேர வேலையே டி.என்.பி.எஸ்.சி.க்கு தயாராவதுதான். நவம்பர் மாதம் தேர்வு குறித்த அறிவிப்பு வெளிவந்ததும், உற்சாகமாக படிக்க ஆரம்பித்தேன். 2010 ஏப்ரல் 11ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. மொத்தம் 1300 காலிப் பணியிடங்களுக்கு. 6 லட்சம் பேர் தேர்வு எழுதினோம். அதில் எழுத்துத் தேர்வில் தேர்ச்சிப் பெற்று, 2011 ஜனவரி மாதம் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டேன். நேர்முகத்தேர்வை மொத்தம் 2600 பேர் எதிர்கொண்டோம். நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் பட்டியல் கடந்த ஏப்ரல் மாதம் தேர்வாணையம் வெளியிட்டது. மதிப்பெண் பட்டியல் வெளியிட்டு ஒரு மாதத்திற்கு உள்ளாகவே, பதவிப்பட்டியல் அதாவது இறுதிப் பட்டியல் வெளியாக வேண்டும். அப்படித்தான் கடந்த முறைகளில் நடந்திருக்கிறது. ஆனால், மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் இறுதிப் பட்டியலை வெளியிடாமல் டி.என்.பி.எஸ்.சி. காலம் தாழ்த்துகிறது. நான் எடுத்த மதிப்பெண்ணுக்கு பதவி கிடைக்குமா கிடைக்காதா? கிடைக்கும்பட்சத்தில், என்ன மாதிரியான பதவியாக அது இருக்கும் என்ற குழப்பமான சூழ்நிலை இருக்கிறது. ஒரு வேளை கிடைக்காமல் போனால், என்ன செய்வது என்ற நிலையில் தற்போது நடைபெறவிருக்கும் தேர்வையும் எழுதவிருக்கிறேன். என் நிலைதான் நேர்முகத் தேர்வை எதிர்கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் என்றார் தேர்வு முடிவை எதிர்நோக்கும் சத்யா.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத மாணவர்: பட்டப் படிப்பு முடித்ததில் இருந்தே டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு படிச்சிட்டு வர்றேன். இதுவரை இரண்டு தடவை குரூப் 1 தேர்வு எழுதியிருக்கிறேன். இரண்டு தடவையும் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்று, மெயின் தேர்வில் தேர்ச்சியடைய முடியாமல் போய்விட்டது. அதேபோல கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற குரூப் 2 தேர்வில் தேர்ச்சிப் பெற்று நேர்முகத் தேர்வில் மதிப்பெண் குறைந்துபோனதால், இறுதிப் பட்டியலில் தேர்வு பெற முடியாமல் போய்விட்டது. அதனால், இந்தத்தேர்வு முடிவை பெரிதாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். இதற்கிடையில் வி.ஏ.ஓ. தேர்வு முடிவு இம்மாதம் 15ஆம் தேதி வெளியிடப்போவதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி. இறுதிப்பட்டியல் வெளியிடுவதைப் பொறுத்துதான் நான் வி.ஏ .ஓ. பதவிக்கு செல்லவேண்டுமா? அல்லது குரூப் 2 பதவிக்கு செல்ல முடியுமா என்பதை தீர்மானிக்க முடியும். இந்நிலையில் தற்போது நடைபெறவிருக்கும் குரூப் 2 தேர்வையும் எழுதவிருக்கிறேன்.
வி.ஏ.ஓ. தேர்வு முடிவு வெளியான உடனேயே சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற தொடங்கிவிடும். அதற்கு நான் ஒப்புகை கடிதம் அளித்துவிட்டாலே, நான் வி.ஏ.ஓ. பதவிக்கு சேர்ந்துவிட்டதாகவே கருத்தில் கொள்ளப்படும். இந்தச் சூழ்நிலையில் நான் பணியில் சேர்ந்தபிறகு குரூப் 2 தேர்வு இறுதிப்பட்டியல் வெளியிட்டு, அதில் எனக்கு நான் எதிர்பார்த்த பதவி கிடைக்கும்பட்சத்தில், கண்டிப்பாக நான் வி.ஏ.ஓ. பதவியை ராஜினாமா செய்யவேண்டியதிருக்கும். இதனால், அந்தப் பதவி காலியிடமாகும். கூடவே அந்தப் பணியிடத்திற்கு காத்திருக்கும் பட்டியலில் உள்ள நபரை உடனடியாகவும் பணியமர்த்த முடியாது. அதற்கு நிர்வாக ரீதியாக சில சிக்கல் இருப்பதால், கண்டிப்பாக அந்த இடத்தில் மற்றொரு நபரை பணியமர்த்த குறைந்தபட்சம் இரண்டாண்டுகள் பிடிக்கும். இம்மாதிரி சம்பவங்கள் இதற்கு முன்பும் நடந்திருக்கிறது.
கடந்த முறை டி.என்.பி.எஸ்.சி. தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும்போது உதவிப் பிரிவு அலுவலர் (ஏ.எஸ்.ஓ.) பதவிக்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை எனவும், ஆனால், எழுத்துத் தேர்வு தேர்ச்சிப் பட்டியல் வெளியிடும்போது ஏ.எஸ்.ஓ. பதவிக்கான காலிப்பணியிடங்கள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால், ஏ.எஸ்.ஓ. பதவிக்கு குறித்த அறிவிப்பு முதலிலேயே வெளியிட்டிருந்தால், நாங்களும் விண்ணப்பித்திருப்போம் என்று அரசுத் துறையில் பணியாற்றும் சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பதால், தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆனால், இத்தேர்வு முடிவு தாமதத்தால், தேர்ச்சியடைந்த மாணவர்கள் கூட மறுபடியும் தேர்வு எழுதக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இதனால், புதிதாக தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, தேர்ச்சியடைந்த மாணவர்களால் புது போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இந்தப் பிரச்சினை குறித்து, பெயர் வெளியிட விரும்பாத மாநில பணியாளர் தேர்வாணைய அலுவலர் ஒருவர் கூறும்போது, தேர்ச்சிப் பட்டியல் வெளியிடும் தாமதத்தால் தற்போது நடைபெறும் தேர்வில் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடாது. கடந்தமுறை தேர்வு எழுதியவர்கள் இந்த முறை தேர்வு எழுதுவதால், புதிய மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்பது தவறான கருத்து. தற்போது தேர்வு எழுதவிருக்கும் தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு பதவி கிடைக்கும்பட்சத்தில் அந்தக் காலியிடம் இயற்கையாகவே மதிப்பெண் அடிப்படையில் அடுத்த இடத்தில் இருக்கும் புதிய மாணவருக்கு கிடைத்துவிடும். இதில் எந்த மாணவரும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை என்றார்.
குறைவான பணிக் காலியிடங்களுக்கு லட்சக்கணக்கான மாணவர்கள் எதிர்கொள்ளும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டித் தேர்வு டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள். கடந்த முறை நேர்முகத் தேர்வு வரை சென்று, தற்போது இறுதிப் பட்டியலை எதிர்நோக்கியிருக்கும் மாணவர்கள், தற்போது நடைபெறவிருக்கும் தேர்வு எழுதும்பட்சத்தில், எந்த சமாதானம் சொன்னாலும், புதிய விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் மிகப்பெரும் சவால்தான்.
குரூப் 2 தேர்வு நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், தேர்விற்கு முன்பே கடந்த ஆண்டு தேர்விற்கான இறுதிப் பட்டியலை வெளியிட்டால், புதிதாக தேர்வு எதிர்கொள்ளும் மாணவர்களும், இறுதிப் பட்டியலை எதிர்கொள்ளும் மாணவர்களும் மகிழ்ச்சியடைவார்கள் என்பதுதான் தற்போது டி.என்.பி.எஸ்.சி. தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களின் ஒட்டுமொத்த கோரிக்கை.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் -1 தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?




தமிழ்வழியில் படித்து தேர்வெழுதி டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று தேர்ச்சிப் பெற்ற திருவண்ணாமலை மாவட்டத்தைச்சேர்ந்த ஜெ. பார்த்திபன்
அளிக்கும் டிப்ஸ்.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் ஒன் தேர்வு சிவில் சர்வீஸ் தேர்வைப்போல் மூன்று கட்டங்களாக நடைபெறும். முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு அடுத்ததாக நேர்முகத் தேர்வு. இந்த மூன்றுத் தேர்விலும் தேர்ச்சிப் பெற்றால் மட்டுமே பதவியில் அமர முடியும். இதில் ஏதாவது ஒரு தேர்வில் தேர்ச்சிப் பெறமுடியாமல் போனால்கூட, மறுபடியும் முதலில் இருந்து இந்தத் தேர்வை எழுதியாக வேண்டும். முதல்நிலைத் தேர்வில் 200 வினாக்கள் கேட்கப்படும். இந்தத் தேர்வுக்கு மொத்தம் 300 மதிப்பெண்கள். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண்கள் வீதம் அளிக்கப்படும். சிவில் சர்வீஸ் தேர்வுக்கும், இந்தத் தேர்வுக்கும் ஒரே வித்தியாசம் என்னவென்றால், இந்தத் தேர்வில் தவறான கேள்விகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் அளிக்கப்படாது.
முதல்நிலைத் தேர்வை எழுதும் மாணவர்கள் காலியிடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து 1:20 என்ற விகிதத்தில் மாணவர்கள் மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். கடந்த ஆண்டு குரூப் 1 தேர்வில் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 61. முதல்நிலைத் தேர்வை 90 ஆயிரம் மாணவர்கள் எழுதினார்கள். இதில் 1300 மாணவர்கள் மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்கள். மெயின் தேர்வை பொறுத்தவரை 1: 10 என்ற விகிதத்தில் மாணவர்களை நேர்முகத் தேர்வுக்கு (ஒரு பதவிக்கு 10 பேர் என்ற விகிதம்) தேர்வு செய்வார்கள். மொத்தம் 61 பதவிக்கு 610 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு, அதில் சிறப்பாக பதில் அளிக்கும் 61 பேருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் பதவிகள் அளிக்கப்படும்.
முதல்நிலைத் தேர்வில் பொதுஅறிவுக் கேள்வியும், மொழிப்பாடக் கேள்விகளும் இடம்பெறும். மெயின் தேர்வை பொறுத்தவரை இதில் இரண்டு தாள்கள். பொது அறிவு முதல் தாள் மற்றும் பொது அறிவு இரண்டாம் தாள். இரண்டும் அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும். ஒவ்வொறு தாளுக்கும், தேர்வு நேரம் 3 மணி நேரம் ஆகும். முதல்நிலைத் தேர்வு முற்றிலும் அப்ஜெக்ட்டிவ் முறையிலானது. ஆனால், மெயின் தேர்வு ஒவ்வொரு கேள்விக்கும் கட்டுரைவடிவில் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். பிளஸ் டூ தேர்வு எந்த முறையில் எழுதுகிறோமோ அந்த முறையில் இந்தக் கேள்வித்தாளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.
மெயின் தேர்வில் முதல் தாளில் கேட்கப்படும் கேள்விகள் இந்திய வரலாறு, கரண்ட் அஃபயர்ஸ்(நடப்பு நிகழ்வுகள்), சர்வதேச நிகழ்வுகள், சமூக நிகழ்வுகள், புள்ளியியல், தமிழக வரலாறு போன்ற பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
இரண்டாம் தாளில் இந்திய அரசியல், இந்திய புவியியல், பொருளாதாரம், இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பொது அறிவியல், தமிழர் பண்பாடு, இலக்கியம், தமிழ்நாடு அரசு நிர்வாகம் போன்ற பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்தப் பிரிவு பாடங்களை மெயின் தேர்வுக்கு மட்டும் என்று படிக்காமல் தொடக்கத்திலிருந்து படித்து வந்தால், நிச்சயமாக முதல்நிலை, மெயின் மற்றும் நேர்முகத் தேர்வில் எளிதில் தேர்ச்சிப் பெற்றுவிடலாம். இந்தத் தேர்வை எதிர்கொள்ள ஆண்டுக் கணக்காய் படிக்க வேண்டிய அவசியம் கிடையாது. 7 மாதம் கடினமாக படித்தால் கண்டிப்பாக இந்தத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றுவிடலாம்.
2007ஆம் ஆண்டுக்கு முன்புவரை மெயின் தேர்வு முற்றிலும் மாணவர்களின் விருப்பப் பாடத்திலிருந்தே கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. விருப்பப் பாடத்தில் ஒரு மாணவர் சிறந்த அறிவு பெற்றிருந்தால் போதும் இந்தத் தேர்வில் எளிதில் வெற்றி பெற்றுவிட முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது நிலைமை அப்படி இல்லை. ஒரு மாணவர் கண்டிப்பாக எல்லா விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தற்போது இந்தத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள், பொது அறிவு விஷயங்களை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். மெயின் தேர்வில் மொத்தம் 110 கேள்விகள் கேட்கப்படும். இதில் 15 மதிப்பெண்கள் கேள்விகளை 4 கேள்விகள் எழுத வேண்டியதிருக்கும். 5 மதிப்பெண்கள் கேள்விகள் 22, 3 மதிப்பெண் கேள்விகள் 20, 1 மதிப்பெண் கேள்விகள் 40 என்று மொத்தம் 88 கேள்விகளுக்கு மாணவர்கள் விடையளிக்க வேண்டும். மீதியுள்ள கேள்விகள் சாய்ஸ்.
மெயின் தேர்வில் முதல் தாளில் கேட்கப்படும் வரலாறு கேள்விகளுக்கு பதிலளிக்க வெங்கடேஷன் எழுதிய சமகால இந்திய வரலாறு மற்றும் இந்திய விடுதலை போராட்ட வரலாறு நூல்களை தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். இந்தப் புத்தகத்தில் உள்ள பல தகவல்கள் மெயின் தேர்வில் பதிலளிக்க எளிதாக இருக்கும். இதுதவிர பிளஸ் டூ வரலாறு புத்தகம், 6ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை உள்ள சமூக அறிவியல் புத்தகத்தை நன்றாக படித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
கரண்ட் அஃபயர்ஸ், சர்வதேச நிகழ்வுகள் போன்றவற்றை தெரிந்துகொள்ள, தினமணி, இந்து நாளிதழ்கள், மாதந்தோறும் வரும், க்ரானிக்கல், விசார்ட், நியூ விசால் போன்ற புத்தகங்களை தேர்வு செய்து படித்தால், சர்வதேச நிகழ்வுகள் மற்றும் கரண்ட் அஃபயர்ஸ் போன்ற கேள்விகளுக்கு ஓரளவிற்கு சரியாக விடையளித்திட முடியும்.
தேசிய அளவிலான புதிய திட்டங்களைப் பற்றி தெரிந்துகொள்ள, திட்டம் என்ற நூல் மாவட்ட அளவில் உள்ள மைய நூலகத்திற்கு வரும். அந்தப் புத்தகத்தைப் படித்து தெரிந்துகொள்ளலாம். அல்லது யோஜனா என்று ஆங்கில வடிவில் வரும் புத்தகத்தைப் படித்து தெரிந்துகொள்ளலாம். நூலகத்திற்கு செல்ல வாய்ப்பில்லாத மாணவர்கள் இணையதளத்தில் வரும் இதன் பக்கங்களை படித்து தெரிந்துகொள்ளலாம். இரண்டாம் தாளில் இந்திய அரசியல் கேள்விகளுக்கு விடையளிக்க லட்சுமிகாந்த் எழுதிய இந்தியன் பாலிட்டி ஆங்கில வழி புத்தகத்தைப் படிக்கலாம். அல்லது தமிழில் பி.ஆர். ஜெயராஜ் எழுதிய இந்திய அரசியலலைப்பு நூலை வாசிக்கலாம். அதுபோல இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றி தெரிந்துகொள்ள பிரத்யோகிதா தர்பான் மாத இதழைப் படிக்கலாம். அல்லது டாக்டர் கலிய மூர்த்தி எழுதிய இந்தியப் பொருளாதாரம் புத்தகத்தைப் படிக்கலாம்.இந்திய புவியியல் பாடத்தைப் படிக்க 6 ஆம் வகுப்பில் இருந்து 10ஆம் வகுப்பு வரை சமூக அறிவியல் புத்தகத்தில் உள்ள புவியியல் பாடங்களைப் படிக்கலாம். அல்லது டாடா மெக்ராகில் புத்தகத்தில் பொது அறிவுப் பகுதியில் புவியியல் பாடத்தைப் படிக்கலாம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் படிக்க 6ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள அறிவியல் புத்தகம் மற்றும், அறிவியல் குறித்த சமீபத்திய செய்திகளை ஆங்கில நாளிதழ்கள் மற்றும் தமிழ் நாளிதழ்களை தொடர்ந்து படிப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். தமிழக நிர்வாகத்துறைக் கேள்விகளுக்கு விடையளிக்க தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் (tண.ஞ்ணிதி.டிண.ஞிணிட்) உள்ள தகவல்களைத் திரட்டிப் படித்துக்கொள்ளலாம். தமிழ் இலக்கிய வரலாறு பற்றி தெரிந்துகொள்ள மு.வரதராசனார் எழுதிய புத்தகத்தைப் படித்து தெரிந்துகொள்ளலாம்.
மெயின் தேர்வை பொறுத்தவரை நேர மேலாண்மை ரொம்ப முக்கியம். கேட்கப்பட்டிருக்கும் எல்லா கேள்விகளுமே பெரும்பாலும் தெரிந்தவையாகத்தான் இருக்கும். ஆனால், எல்லாக் கேள்விகளையும் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை. அதற்கு முறையான பயிற்சியை மாணவர்கள் மேற்கொண்டிருக்க வேண்டும். எல்லாக் கேள்விகளுமே படிக்கும்போது தெரிந்தவையாகத்தான் இருக்கும். ஆனால், அதை எழுதிப்பார்க்கும்போது சொல்ல வந்த விஷயத்தை சொல்லும் நேரத்திற்குள் சொல்வதற்கு தடுமாற்றம் இருக்கும். அதனால், வீட்டில் மாதிரித்தேர்வுகள் எழுதிப்பாருங்கள். மெயின் தேர்வை பொறுத்தவரை எழுத்துப் பயிற்சி மிக அவசியம். எழுத்துப் பயிற்சி இல்லாததால், பல்வேறு மாணவர்கள் தெரிந்த கேள்விக்குக் கூட விடையளிக்கமுடியாத சூழல் ஏற்பட்டுவிடுகிறது.
அதேபோல மெயின் தேர்வை ஆங்கில வழியில் எழுதினால்தான் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற கருத்து பரவலாக தேர்வெழுதும் மாணவர்களிடைய இருக்கிறது. இது முற்றிலும் தவறு. தமிழ் வழியில் சிறப்பாக தேர்வெழுதினாலும் அதிக மதிப்பெண்களைப் பெறலாம். மொழியினால், மட்டும் மதிப்பெண்கள் கிடைத்துவிடாது. நாம் சொல்லும் விஷயங்கள் எந்தளவிற்கு ஆதாரப்பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாக இருக்கிறது என்பது மட்டுமே தேர்வில் கவனிக்கப்படுகிறது என்பதை தேர்வு எழுதப்போகும் நபர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் சாதனையாளர் பார்த்திபன்.

Thursday, June 30, 2011

ஏழை மாணவர்களுக்கு கல்கி உதவித்தொகை



பள்ளிப் படிப்பு, பட்டப் படிப்பு, முதுநிலைப் பட்டப் படிப்பு இப்படி அனைத்துப் பிரிவு படிப்புகளில் சேர்ந்து படிக்க விரும்பும், ஏழை எளிய மாணவர்களுக்கு ரூ.5 லட்சம் கல்வி உதவித்தொகை அளிக்கிறது, அமரர் கல்கி நினைவு அறக்கட்டளை.
வீட்டில் படிக்க வைக்க போதிய வசதி இல்லை. உடல் ஊனம்,இப்படி பல்வேறு பிரச்சினைகளுக்கு ஊடே நன்றாக படிக்க வேண்டும் என்ற சிந்தனை மட்டும் உள்ள தற்போது சிறப்பாக படித்து வரும், ஏழை, எளிய மாணவர்களுக்கு அவர்களின் பள்ளிப் படிப்பு மற்றும் உயர்கல்விக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறது அமரர் கல்கி அறக்கட்டளை. இந்த உதவித்தொகைப் பெற விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை மாணவர்கள் தங்கள் கைப்பட ஒரு கடிதம் வடிவில் எழுத வேண்டும். தட்டச்சு மற்றும் கம்ப்யூட்டர் கடிதங்கள் நிராகரிக்கப்படும். பார்வையற்ற மாணவர்கள், பிறர் எழுதித் தர, கைநாட்டு பதிக்கலாம். சிறப்புக் கல்விப் பயிற்சி தேவைப்படும் (ஸ்பாஸ்டிக், டிஸ்லெக்ஸியா குறைபாடுள்ளவர்கள்) மாணவர்கள் சார்பில் பெற்றோர் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை அனுப்பும்போது, மாணவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் சேர்ந்து படிக்க அனுமதி பெற்றுள்ளது குறித்த தகவல்களை இணைத்து அனுப்ப வேண்டும். தாற்காலிக அனுமதி பெற்ற கல்வி நிலையத்தில் சேர்ந்துள்ள மாணவர்கள் இந்த உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்க முடியாது. பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் என்பதை உறுதிப்படுத்த பெற்றோரின் ஆண்டு வருமானச் சான்றிதழ், கடைசியாக படித்த வகுப்பில் பெற்ற மதிப்பெண் பட்டியல் நகல், மாணவர் படித்த கல்வி நிலையத்தின் முதல்வர் முத்திரை, கையெழுத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
உடல் ஊனமுற்றவர் எனில் அது பற்றிய முழுவிவரம் மற்றும் அதற்கான மருத்துவச் சான்றிதழை இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். கூரியரில் அனுப்பக் கூடாது. நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தேவையற்ற சான்றிதழ்களை அனுப்ப வேண்டாம். அத்தகைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரங்கள் முன்கூட்டியே மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும். சான்றிதழ்கள் திருப்பி அனுப்ப முடியாததால், மாணவர்கள் எக்காரணம் கொண்டும் அசல் சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தேர்ந்ந்தெடுக்கப்படும் முதுநிலைப் பட்டப் படிப்பு அல்லது ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்கள், பத்து பேருக்கு தலா ரூ.7,500 உதவித்தொகை அளிக்கப்படும். பட்டப் படிப்பு மாணவர்கள் 60 பேருக்கு தலா ரூ.4000, மேல்நிலைப்பள்ளி அல்லது டிப்ளமோ படிப்பு மாணவர்கள், 64 பேருக்கு தலா ரூ.2,500 வீதம் வழங்கப்படும். ஸ்பாஸ்டிக், டிஸ்லெக்ஸியா, ஆட்டிஸ்டிக் போன்ற சிறப்புக் கல்வி பயிற்சி தேவைப்படும் ஐந்து மாணவர்களுக்கு தலா ரூ.5,000 உதவித்தொகை அளிக்கப்படும். இவற்றுள் அமரர் கல்கி படித்த மூன்று பள்ளிகளில் மூன்று மேல்நிலை மாணவர்களுக்கு மூன்று உதவித்தொகைகள் ஒதுக்கப்படுகின்றன. மீதமுள்ள உதவித் தொகைகளைப் பெற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: ஜூலை 30.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக அறங்காவலர், கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை, புது எண் 14, நான்காவது பிரதான சாலை, கஸ்தூர்பா நகர், அடையாறு, சென்னை - 600020.

தேசிய அளவிலான விடியோ போட்டி!



சர்வதேச சமூகம் சந்தித்து வரும் பருவ நிலைமாற்றத்தை சரிசெய்வதற்கான சிறந்த வீடியோ காட்சிக்கு இந்திய இளைஞர் காலநிலை நெட்வொர்க் அமைப்பு சிறப்பு விருதை வழங்குகிறது.
நாம் சாப்பிடும் உணவு எங்கிருந்து வருகிறது தெரியுமா? நாம் சாப்பிடும் மாமிச உணவால் சுற்றுப்புறம் எப்படியெல்லாம் சுகாதாரமற்றதாக மாறுகிறது தெரியுமா?. நாம் சாப்பிடும் மாமிச உணவால் மட்டும் பசுமை வீட்டு வாயுக்கள் 18 சதவீதம் பாதிப்படைவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு நிரூபித்துள்ளது. உணவு மற்றும் விளைநிலங்களால், சுற்றுப்புறம் எப்பஐ சீர்கெடுகிறது என்பதை நிரூபிப்பதற்கான போட்டித்தான் இது. மாறிவரும் பருவநிலை மாற்றத்தை ஏதாவது ஒரு வகையில் சீர் செய்வதற்கு ஓர் குரலாகத்தான் இந்தப் போட்டி இருக்கும். ஐல்லியை தலைமையிடமாகவும் பல்வேறு மாநிலங்களில் செயல்படும் இந்தியன் யூத் கிளைமேட் நெட்வொர்க் மூலம் நடத்தப்படும் இந்த வீடியோ போட்டியில் பங்குபெறு 18 வயது நிரம்பியிருந்தால் போதும்.
நீங்கள் எடுக்கும் விடியோ மிகவும் தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பது இல்லை. செல்போனில் எடுக்கப்பட்ட படக்காட்சியாகக் கூட இது இருக்கலாம். ஆனால், பார்வையாளர்களுக்கு புரியும்பஐ இருக்க வேண்டும் அவ்வளவுதான்.விடியோ காட்சிகள் 5 முதல் 15 நிமிடங்களுக்கு ஓடுவதாய் இருக்க வேண்டும். வீடியோ காட்சிகள் மாநில மொழிகளில் இருக்கலாம். ஆனால், மற்றவர்களுக்கு புரியும் வகையில் காட்சிகளுக்கு ஊடே ஆங்கில மொழியில் சப் டைட்டில் கொடுக்க வேண்டியது கட்டாயம். இந்தப் போட்டியில் இந்தியாவைச்சேர்ந்த 18 வயது நிரம்பிய மாணவர்கள்,தனியாகவோ அல்லது குழுவாகவோ விண்ணப்பிக்கலாம். நீங்கள் அனுப்பும் படக்காட்சிகள், தெளிவில்லாததாகவும், சேதமடைந்ததாகவோ இருந்தால், அது தேர்வு செய்யப்படாது.
விடியோப் பதிவில் விலங்குகளை துன்புறுத்துவது போலவோ அல்லது கொல்வது போலவோ காட்சிகள் இருக்கக் கூடாது. தேர்வு செய்யப்படும் போட்டியாளர்கள் பற்றிய விவரம், கடிதம் அல்லத இ-மெயில் மூலம் அறிவிக்கப்படும். உங்கள் விடியோ தேர்வு செய்யப்படும் பட்சத்தில் அதற்கான வெகுமதியை இந்தியன் யூத் கிளைமேட் நெட்வொர்க் அளிக்கும்.
விடியோ பதிவுகளை அனுப்ப வேண்டிய கடைசி தேதி: ஜூலை 31.
போட்டி குறித்த மேலும்
விவரங்களுக்கு:http://www.foodinfocus.in/

கிராபிக்ஸ் ஓவியப் போட்டி



பிரிண்ட் துறையில் படிக்கும் மாணவர்கள், அனிமேஷன் துறையில் கைத்தேர்ந்த மாணவர்களுக்கான போட்டி இது. சீன நாட்டில் ஹாங்காங் பகுதியில் நடைபெறும் இந்தப் போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பணப் பரிசு மட்டுமல்லாமல், இரண்டு மாதம் ஹாங்காங்கில் தங்குவதற்கான வாய்ப்பையும் அளிக்கிறது, ஹாங்காங் கிராபிக் ஓவியப் போட்டியை நடத்தும் ஷின் - இ- டாய் இன்டர்நேஷனல் யுனிவர்சிட்டி.
2000 ஆம் ஆண்டிற்குப் பிறகு கம்ப்யூட்டர் சாதனத்தின் பயன்பாடு மற்றும் தொழில்நுட்பத்தால், அச்சுத் துறை பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளது. அச்சு ஏற்றுவதிலிருந்து, அதை புத்தக வடிவத்திற்கு கொண்டு வருவதுவரை பல்வேறு புதுமைகள் வந்துவிட்டன. அச்சுத் துறையிலேயே 2டி, 3டி, 4டி என்று பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன. இப்படி பல்வேறு தொழில்நுட்பங்களுடன் புதுமையான ஒரு படைப்பை மாணவர்கள் இந்தப் போட்டிக்கு அனுப்பலாம்.
படைப்பை அனுப்பும்போது, அது எம்மாதிரியான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை தெளிவாக குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். படைப்பு முற்றிலும் சொந்தமாக இருக்க வேண்டும். படைப்பை நகல் எடுத்து அனுப்பக் கூடாது. படைப்பு எந்த வகையிலும் சேதமாகாதவாறு அனுப்ப முயற்சியுங்கள். படைப்பிற்கான இன்னொரு பிரதியை பிடிஎஃப் பார்மெட்டில் சிடியில் அனுப்ப மறந்துவிடாதீர்கள்.
மாணவர்கள் தனிப்பட்ட முறையிலும் அனுப்பலாம். அல்லது கல்வி நிறுவனங்கள் மூலமாகவும் அனுப்பலாம். சிறந்த படைப்பாக தேர்ந்தெடுக்கப்படும் கிராபிக் ஓவியத்திற்கு இந்திய மதிப்பிற்கு ரூ.45 ஆயிரம் பரிசுத் தொகையாக வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல், அந்தப் பல்கலைக்கழகத்தில் சிறந்த படைப்பாக உங்கள் படைப்பு காட்சிக்கு வைக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர் 2012 ஆம் ஆண்டு இரண்டு மாதங்கள் ஹாங்காங்கில் தங்கியிருக்கும் செலவு முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
படைப்புகளை அனுப்பவேண்டிய கடைசி தேதி: ஆகஸ்ட் 15.
படைப்பை எப்படி அனுப்ப வேண்டும், அதற்கான நிபந்தனைகள் என்ன என்பது போன்ற தகவல்களை இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
விவரங்களுக்கு :http://www.open-printshop.org.hk/submission2011/pdf/xyd_form_eng.pdf

சர்வதேச சுவரொட்டி வடிவமைப்புப் போட்டி:


சுவரொட்டி வடிவமைப்பில் ஆர்வமும், ஈடுபாடும் உள்ள மாணவர்கள் சர்வதேச அளவில் நடைபெறும் சுவரொட்டிப் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெறலாம்.
வட மத்திய சுவிட்சர்லாந்து பகுதியில் அமைந்துள்ளது லூசர்ன். இந்த மாகாணத்தில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் அந்நாட்டின் மாபெரும் கலாசார இசைநிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியை கண்டுகளிக்க சர்வதேச நாடுகளில் இருந்து பல்வேறு முக்கியத் துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சுவரொட்டி கண்காட்சி நடைபெறும். அந்தக் கண்காட்சியில் நீங்கள் வடிவமைத்த சுவரொட்டியும் இடம்பெற வேண்டும் ஆசைப்படும் மாணவர்கள், உடனடியாக சுவரொட்டிகளை வடிவமைக்க ஆரம்பித்துவிடலாம்.
பள்ளி, கல்லூரி, முதுநிலைப் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள் இந்தப் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம். சர்வதேச மக்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினைகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் வடிவமைக்கும் சுவரொட்டி பிரதிபலிக்க வேண்டும். வேறு யாரேனும் வடிவமைத்த சுவரொட்டிகள், இணையதளத்தில் வரும் சுவரொட்டிகளின் பிரதிகளை எடுத்து போட்டிக்கு அனுப்பும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இது முற்றிலும் மாணவர்களின் கற்பனைத்திறனால் வடிவமைக்கப்பட்ட ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.
போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த 20 சுவரொட்டிகள், இசை நிகழ்ச்சியின் சுவரொட்டி கண்காட்சியில் இடம்பெறும். அதில் தேர்வு செய்யப்படும் மிகச் சிறந்த சுவரொட்டி, சுவிட்சர்லாந்தின் மிகப் புகழ்பெற்ற ஏபிஜி விளம்பர வர்த்தக நிறுவனம் மூலம் 500 பிரதிகள் எடுக்கப்பட்டு, அந்த சுவரொட்டிகள் சுவிட்சர்லாந்தின் முக்கிய இடங்களை அந்தச் சுவரொட்டி அலங்கரிக்கும். இந்தப் படைப்புக்கு சிறந்த சன்மானமும் அளிக்கப்படும் என்கிறது, லூசெர்ன் மாகாண அதிகாரிகள்.
மாணவர்களின் படைப்புகள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: செப்டம்பர் 30.
விவரங்களுக்கு: http://www.graphiccompetitions.com/students-only/weltformat-student-poster-competition