Friday, September 16, 2011

புதிய மன்னர்கள்!


மிகப்பெரிய ஐ.டி. நிறுவனத்தில் பொறியாளராக கைநிறைய ஊதியம், கனவுப் படிப்பான மருத்துவம் இப்படி எல்லாமும் உதறித்தள்ளிவிட்டு சமுதாயப் பணி செய்வதற்காக டி.என்.பி.எஸ்.சி. தேர்வெழுதி டெபுடி-கலெக்டராகவும், உதவி காவல் ஆய்வாளராகவும் பொறுப்பேற்று இருக்கிறார்கள் ஏழு இளைஞர்கள்
கஷ்டப்பட்டு எப்படியாவது என்ஜினீயரிங் முடிச்சுட்டு ஐ.டி. கம்பெனியில கை நிறைய சம்பாதிக்கணும். அதில் இருந்துக்கிட்டே அப்படியே ஃபாரீன் போயிட்டு ஹைடெக் வாழ்க்கை வாழணும்னு நினைக்கிற இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய ஊதியத்தை உதறித் தள்ளிவிட்டு, தங்கள் படிப்பை மக்களின் சேவைக்கு பயன்படுத்தவேண்டும் என்ற ஆசை எப்படி வந்தது?.
பழனி பக்கத்துல உள்ள பெத்தநாயக்கன்பட்டி கிராமம்தான் எனக்கு சொந்த ஊர். எங்கள் குடும்பம் விவசாயம் சார்ந்தது. அப்பா நாலாவது வரை படிச்சிருக்கிறார். எங்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரி நான்தான். எங்க குடும்பத்துல யாருமே படிக்காததால, அப்பாவுக்கு என்னை இங்கிலீஸ் மீடியத்துலதான் படிக்க வைக்கணும்னு ஆசை. ரொம்ப கஷ்டப்பட்டு படிக்க வச்சார். பிளஸ் டூ வுல 1052 மதிப்பெண்கள் எடுத்திருந்தேன். அப்போ பொறியியல், மருத்துவம் படிக்கறதுக்கு நுழைவுத் தேர்வு உண்டு. அந்தத் தேர்வில் பழனி கல்வி மாவட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்து தேர்ச்சிப் பெற்றேன். நுழைவுத்÷ தர்வு மற்றும் நான் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், கோயமுத்தூரில் பி.எஸ்.ஜே. அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவு கிடைத்தது. சொல்லப்போனா எங்க ஊர்ல என்ஜினீயரிங் சேர்ந்து படிச்ச முதல் மாணவன் நான்தான்.
படிக்கும்போது அரசு சார்பில் பல்வேறு உதவித்தொகைகளைப் பெற்றிருக்கிறேன். 2003ஆம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்தேன். 2007ஆம் ஆண்டு பொறியியல் படிப்பு முடிக்கும் முன்பாகவே தனியார் ஐ.டி. துறையில் புராஜக்ட் என்ஜினீயர் பதவியில் வேலைக்கு அமர்ந்தேன். எடுத்த எடுப்பிலேயே 35 ஆயிரம் சம்பளம். பட்ட கஷ்டத்துக்கு கைநிறைய சம்பளம் என்ற மனநிலைக்குப் பதிலாக, அரசு கொடுத்த இலவசப் படிப்பில் படித்துவிட்டு, அதில் பெற்ற கல்வியை வெளிநாட்டு தனியார் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்த மனம் இடம்கொடுக்கவில்லை. என்னுடைய படிப்பு தமிழக வளர்ச்சிக்கு பயன்பட வேண்டும் என்ற எண்ணமும், சீறுடைப் பணியில் சேர வேண்டும் என்ற ஆசையும் எழுந்தது. இதே ஆசையில் ஆறு நண்பர்கள் என்னுடன் பயிற்சி மையத்தில் சேர்ந்தார்கள் என்றார், தற்போது டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வில் தேர்ச்சிப் பெற்று டெபுடி கலக்டர் பதவியை மறுத்து, டி.எஸ்.பி. பதவியை தேர்வு செய்த பொன்.கார்த்திக்.
முதல் முதல்ல நாங்க எல்லாரும் ஒரு தனியார் பயிற்சி மையத்துலதான் சந்திச்சோம். டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1ல் பாஸ் பண்ணியாச்சுன்னா கை நிறைய சம்பளம் கிடைக்கும்னு, நாங்க இந்தத் தேர்வை தேர்வு செய்யல. நான் சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. துறையில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அமெரிக்கா செல்லக்கூடிய வாய்ப்பு வந்த சமயம்தான், அந்தப் பணியை உதறிவிட்டு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத முன்வந்தேன். என்னுடைய படிப்பு இந்த சமுதாயத்திற்கு பயன்பட வேண்டும். அரசு அலுவலகங்கள் என்றாலே லஞ்சம் கொடுத்தால்தான் வேலை கிடைக்கும் என்ற நிலை இருக்கிறது. பணப் பரிவர்த்தனை அனைத்தையும் எலக்ட்ரானிக் முறையில் கொண்டு வந்தால், லஞ்சம் என்ற ஒன்றை அறவே ஒழிக்கலாம். அதற்கான ஆக்கப்பூர்வமான திட்டத்தை வகுத்துக்கொடுப்பேன். நகரங்களில் மட்டுமே பெரும் கடைகளில் பண பரிவர்த்தனை எலக்ட்ரானிக் கார்டுகள் மூலம் நடைபெறுகிறது. இந்த திட்டத்தை அரசு அலுவலகங்கள் ஆரம்பித்து கிராமங்கள் தோறும் கொண்டு சென்றுவிட்டால், லஞ்சத்தை ஒழிக்கலாம்தானே! என்கிறார் இந்த ஆண்டு குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று துணைப் பதிவாளர் பதவியில் அமரப்போகும் ஜானகி.
நான் மதுரை தியாகராஜா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படிச்சிட்டு இருந்தப்போ, அப்பா கேன்சர்ல இறந்துட்டார். வங்கிக் கடன்லதான் பொறியியல் படிப்பை படிச்சேன். பட்டப் படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறேன். படிச்சு முடிச்சவுடனேயே தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை கிடைச்சது. கடன் வாங்கி படிச்சதுலேயும், வீட்ல பணத் தேவை இருந்ததாலேயும் கண்டிப்பா வேலைக்கு சேர வேண்டிய சூழ்நிலை. ஒன்றரை வருஷம் வேலை பார்த்து இருந்த கடன்களை அடைச்சேன். நண்பர்கள் கொஞ்சம் உதவினாங்க. முதலாளி யாருன்னு தெரியாது. நாள் முழுக்க எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் கூடத்தான் கழிச்சு ஆகணும். என்னுடைய அடையாள அட்டையை கழட்டி வச்சிட்டா, நான் யாருன்னே அந்த நிறுவனத்துக்கு தெரியாது. இந்த மாதிரி சூழலுக்காகத்தான் தங்கப் பதக்கம் பெற்றேனா.. என்ற எண்ணமும், சமுதாயத்துக்கு தங்கப்பதக்கம் பெற்றுத் தந்த என் படிப்பு உதவணும்ங்கறதால, வேலையை தூக்கிப் போட்டுட்டு தனியார் பயிற்சி மையத்துல டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு எழுதி முதல் முறையிலேயே தேர்ச்சிப் பெற்றுவிட்டேன் என்கிறார் தமிழக அளவில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று, சப் கலெக்டராக அமரப்போகும் அருண் சத்யா.
சுத்தமான காய்கனி, பழங்கள் கிடைப்பதில்லை. எல்லாவற்றிலும் பூச்சிக்கொள்ளி மருந்து விஷம்போல் இருக்கிறது. விவசாயத்தில் இயற்கை உரங்களின் அவசியத்தை மக்களிடைய எடுத்துச் சொல்லணும். இயற்கை உரங்கள் பயன்படுத்தி அதிக சாகுபடி பெறுவதற்கான புதிய திட்டங்கள் வகுத்துக்கொடுத்து, விவசாயத்தில் தமிழ்நாடு தன்னிறைவு பெற்ற மாநிலமா இருக்கணும் அதற்கு புதுத் திட்டங்களை வகுத்துக்கொடுப்பேன் என்கிறார் பல் மருத்துவப் படிப்பை படித்து மருத்துவப் பணிக்குச் செல்லாமல், தற்போது சப் கலக்டர் பதவியில் அமரப்போகும் பிரியதர்ஷினி.
நெய்வேலி பக்கத்துல ஊத்தங்கல்தான் எங்க சொந்த ஊர். வீட்டுல அப்பா அம்மாவை தவிர்த்து என்னோட சேர்த்து வீட்ல மொத்தம் அஞ்சு பேர். நான்தான் மூத்த பொண்ணு. எனக்கு மூணு தங்கச்சி, ஒரு தம்பி. அப்பா ஊத்தங்கல்ல சின்னதா ஹோட்டல் வச்சிருக்கார். பிரமாதமான வருமானம் கிடையாது. கிடைக்கிற சொர்ப்ப வருமானத்துலதான் குடும்பம் ஓடிக்கிட்டு இருந்துச்சு. நான் பிளஸ் டூவுல 1126 மதிப்பெண்கள் பெற்றதால, சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் படிச்சேன். படிச்சு முடிச்சவுடனேயே பன்னாட்டு கம்பெனியில சாஃப்ட்வேர் என்ஜினீயர் போஸ்ட் கிடைச்சது. வீட்ல வருமை. நான் வேலைக்குப் போனாதான் தங்கச்சிங்களயும், தம்பியையும் படிக்க வைக்க முடியும். முதல்ல ஹைதராபாத்துலதான் வேலை கிடைச்சது. 40 ஆயிரம் சம்பளம். குடும்பத்துக்காக வேலைக்குப் போனேனே தவிர விருப்பப்பட்டு அந்த வேலையில சேரல. மக்களுக்கு சேவை செய்யணும் இதுதான் ஆசை என்கிறார் குரூப் 1 தேர்வில் தமிழக அளவில் ஆறாம் இடம் பிடித்த அனுஷ்யா தேவி.
சென்னை ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த பழனிகுமார் கூறும்போது, அப்பா பேப்பர் கடை வச்சிருந்தார். பிளஸ் டூவுல அதிகம் மதிப்பெண்கள் கிடைச்சதால, அண்ணா பல்கலைக்கழகத்துல ஈஸியா இடம் கிடைச்சிடுச்சு. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிச்சு முடிச்சேன். அமெரிக்காவில் எம்.எஸ். படிப்பதற்கு இடமும் கிடைத்தது. இருந்தாலும் அமெரிக்காவில் போய் படிக்க மனம் ஒத்துக்கவில்லை. அரசுப் பணியில் சேர்ந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று படிச்சேன். நான் பட்ட கஷ்டத்துக்கு பலனா, இன்னிக்கு டெபுடி கலெக்டர் பதவியில் அமரப்போகிறேன்.
எனக்கு சொந்த ஊர் மதுராந்தகத்திற்கு அருகேயுள்ள அருங்குளம் கிராமம். அப்பா எட்டாம் வகுப்பு வரைக்குத்தான் படித்துள்ளார். படிச்சது எல்லாம் ஊராட்சிப் பள்ளியில்தான். என்ஜினீயரிங் படிக்கறதுக்கு வசதியில்லாததால் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சேன். படிச்சு முடிச்சதும் ஒரு ஐ.டி. நிறுவனத்துல வேலை கிடைச்சது. வேலையில் மனசு ஒட்டல. வேலையை விட்டுட்டு, போட்டித் தேர்வுக்கு படிக்க ஆரம்பிச்சுட்டேன். கிராமத்துல இருந்து படிச்சதால எப்படி படிக்கணும், எந்த புத்தகத்தை தேர்வு செய்து படிக்கணும் என்பதெல்லாம், இரண்டு மூன்று போட்டித் தேர்வு எழுதிய பிறகுதான் தெரிய ஆரம்பித்தது. அதனாலதான், இவங்கள மாதிரி ஒரே வருஷத்துல படிச்சு பாஸ் பண்ணி இந்தப் பதவிக்கு என்னால வர முடியல. இதற்கான உழைப்பு கிட்டத்தட்ட ஐந்து வருஷம் என்று சொல்லும் சதீஷ் தற்போது டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வில் துணைப் பதிவாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஏழு பேரில் பழனிக்குமார், சதீஷ் மட்டும் கொஞ்சம் வித்தியாசமானவர்கள். காரணம் இவர்கள் ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வில் தேர்ச்சிப் பெற்று அரசுத் துறையில் முக்கியப் பதவியில் இருந்துகொண்டேதான் குரூப் 1 போட்டித் தேர்வில் தேர்ச்சிப் பெற்று, இந்தப் பதவியை எட்டிப் பிடித்துள்ளனர். ஆனால், இந்த ஏழு பேரின் ஒட்டுமொத்தக் கனவும், தாங்கள் படித்தப் படிப்பு ஏதேனும் ஒரு வகையில் சமுதாயத்திற்கு பயன்படும் என்பதற்காகத்தான் .
கிடைத்த மிகப்பெரிய சம்பளத்தை உதறிவிட்டு மக்களுக்கு சேவை செய்வதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த ஏழு மாணவர்களும் ஐ.டி. வேலைதான் பிரதானம் என்று ஏங்கும் மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருப்பார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

No comments:

Post a Comment