Thursday, July 28, 2011

புது திட்டம்!


மாணவர்களின், பாடப் புத்தக சுமையை குறைக்கும் வகையில், அடுத்த கல்வியாண்டு முதல் காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என, மூன்று தேர்வுகளுக்கும், ஒவ்வொரு பாடத்திற்கும் மூன்று பாடப் புத்தகங்களை வழங்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழ், அறிவியல், கணிதம் என, எந்தப் பாடப் புத்தகமாக இருந்தாலும், ஆண்டு முழுவதும் தடிமனான பாடப் புத்தகங்களை, மாணவர்கள் சுமந்து செல்ல வேண்டியுள்ளது. காலாண்டுத் தேர்வுக்கு குறிப்பிட்ட பாடப் பகுதிகளும், அரையாண்டுத் தேர்வுக்கு காலாண்டுத் தேர்வுடன், அரையாண்டுத் தேர்வுக்கு உட்பட்ட கூடுதல் பாடப் பகுதிகளுடன் மாணவர்கள் படிக்க வேண்டும். முழு ஆண்டுத் தேர்வுக்கு, ஒட்டுமொத்த பாடத்தையும் படிக்க வேண்டும். இதனால், மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதோடு, அதிக புத்தக சுமையால் மாணவர்களுக்கு முதுகுத்தண்டில் பாதிப்பு ஏற்படுவதாகவும் பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதையடுத்துதான் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்த பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
அதன்படி, அடுத்த கல்வியாண்டிலிருந்து ஒவ்வொரு பாடத்திற்கும், காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என, மூன்று தேர்வுகளுக்கும், மூன்று பிரிவுகளாக பிரித்து, சிறிய அளவில் பாடப் புத்தகங்களை அச்சிட்டு வழங்க, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் அமலுக்கு வந்ததும், தேர்வு முறைகளிலும் மாற்றம் கொண்டு வரப்படும். அரையாண்டுத் தேர்வில், காலாண்டுத்தேர்வுக்கான பாடப் பகுதிகளும், முழு ஆண்டுத் தேர்வில், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு பாடப் பகுதிகளும் இடம் பெறாது. அந்தந்த தேர்வுக்குரிய பாடப் பகுதிகளிலிருந்து மட்டும் கேள்விகள் கேட்கப்படும்.

No comments:

Post a Comment