Friday, September 16, 2011

காலை உணவுக்கு வித்திட்ட தொடக்கப்பள்ளி!


பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு காலை உணவு ஆரம்பித்து பல்வேறு புதிய நடைமுறைகளை தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி, மற்றப் பள்ளிகளுக்கு முன்மாதிரிப் பள்ளிகளாக மாற்றி சாதனைப் படைத்துள்ளார் இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுபெற்றுள்ள திருச்சி தஞ்சம்மாள் மெமோரியல் தொடக்கப்பள்ளி ஆசிரியை விசாலாட்சி.
மற்றப் பள்ளிகளுக்கு முன்னுதாரணமாய் உங்கள் பள்ளியை மாற்றியது எப்படி என்று விசாலாட்சியிடம் கேட்டோம்.
இந்தப் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்து 35 வருஷம் ஆகுது. 22 வருஷம் உதவி ஆசிரியரியராக பணியாற்றினேன். 1999ஆம் வருஷத்திலிருந்து இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். எங்கள் பள்ளியில் படிக்கும் அனைத்துக் குழந்தைகளும் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள்தான். எந்தக் குழந்தைக்கும் மூன்று நேர உணவு என்பது கனவுதான்.
மதியம் எப்படியும் சத்துணவு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், காலையில் பட்டினியுடன் ஒட்டிய வயிற்றுடன் வரும் அவர்கள், மதியத்திற்குள்ளாகவே சோர்வாகிவிடுவார்கள். தொடர்ந்து இதை கவனித்து வந்தேன். இதற்கு ஏதாவது மாற்று வழி செய்யவேண்டும் என்று யோசித்து, காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்த யோசித்தேன். ஊரில் ஓரளவு உதவி செய்பவர்களின் பட்டியல் எடுத்து அவர்களிடம் தயங்காமல் கையேந்தினோம். உதவி கிடைத்தது. சிலர் அரிசியாக கொடுத்தார்கள். சிலர் பருப்பு கொடுத்தார்கள். சிலர் தயிர், பழம், காய்கனி கொடுத்து உதவினார்கள். அவர்களின் உதவிப்படி 2007ஆம் ஆண்டு எங்கள் பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கினோம். பசிப்பிணியை நீக்கினால், படிப்பறிவு தானாக ஊற்றெடுக்கும் என்ற பொன்மொழியின் அடிப்படையில் நாங்கள் தொடங்கிய இந்த திட்டத்தால், எங்கள் பள்ளியில் பள்ளி இடைநிற்றல் இல்லாமல் போனது. மாணவர்கள் ஆர்வமாய் பள்ளிக்கு வருகிறார்கள். இன்று எங்கள் பள்ளியைப் பின்பற்றி திருச்சியில் 40 பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மற்றவர்களை தொடர்புகொள்ள தற்போது பல்வேறு வசதிகள் பெருகிப்போய், லெட்டர் எழுதும் வழக்கம் குறைந்து வருகிறது. ஆனால், கடிதம் எழுதும் நல்ல விஷயத்தை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக வகுப்பு நடத்தும் ஆசிரியர்களைப் பற்றியும், இன்று வகுப்பில் என்ன நடந்தது? பாடம் எப்படி புரிந்தது என்பதைப் பற்றி ஆசிரியர்களுக்கு கடிதம் எழுத கற்றுக்கொடுத்தோம். அந்த முயற்சி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் நல்ல புரிதலை ஏற்படுத்தி தந்தது. எந்த மாணவர்களுக்கு பாடங்கள் சரியாகப் புரியவில்லை என்பதை எங்களால் அடையாளம் காண முடிந்தது. அதேபோல, ஆங்கிலத்திற்கு இணையான தமிழ் சொல்லை சுவற்றில் படம் வரைந்து வைத்திருப்போம். சுவர் அகராதி என்னும் இந்த செயல்முறை மூலம் மாணவர்கள் மத்தியில் ஆங்கிலத்தை எளிமையாக என்னால் எடுத்துச் செல்ல முடிந்தது. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக எந்த தொடக்கப்பள்ளியை திருச்சியில் முன்னுதாரணப் பள்ளியாக உயர்த்திவிட்டோம். ஆனால், தமிழகத்தின் முன்மாதிரி தொடக்கப்பள்ளியாக மாற்றுவதே தற்போது எனக்கு இருக்கும் லட்சியம் என்றார் இந்த தேசிய நல்லாசிரியை.

No comments:

Post a Comment